திரும்ப திரும்ப.. நீதிமன்ற நேரத்தை வீணாக்குறீங்க.. மத்திய அரசுக்கு ரூ.25000 அபராதம் விதித்த ஐகோர்ட்!
சண்டிகர்: மத்திய அரசுக்கு ரூ.25,000 அபராதம் விதித்து பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக மத்திய அரசுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
1987ஆம் ஆண்டில் ஹர்பஜன் கவுர் என்பவரின் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக அவருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க குர்தாஸ்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 2004ஆம் ஆண்டில் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த அப்பீல் நிராகரிக்கப்பட்டு, குர்தாஸ்பூர் மாவட்ட கூடுதல் நீதிபதியின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கூடுதல் சந்தை மதிப்பின் தொகைக்கு வட்டி வழங்குவதில் கீழமை நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்கவில்லை என மத்திய அரசு மீண்டும் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, கூடுதல் சந்தை மதிப்பு, இழப்பீட்டின் ஒரு பகுதியாகும் என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டி, பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதி ராஜ்பீர் செஹ்ராவத், மத்திய அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், நிலத்தின் உரிமையாளர் கூடுதல் சந்தை மதிப்பின் மீதான வட்டிக்கு உரிமையுடையவர் என்றும் தெரிவித்ததோடு, மீண்டும் மீண்டும் தேவையில்லாமல் வாதாடி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக கூறி மத்திய அரசுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
நீதிபதி ராஜ்பீர் செஹ்ராவத் , "நீண்ட காலத்திற்கு முன்பே உச்சநீதிமன்றத்தால் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட ஒரு சட்டப் பிரச்சினையில் மனுதாரர்கள் தேவையில்லாமல் அப்பீல் செய்யும் அளவிற்குச் சென்றுவிட்டதால், மனுதாரர்கள் தகுந்த பலனை பெறத் தகுதியானவர்கள். நீதிமன்றத்தின் மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர்களின் தவறை உணர்த்துவதற்காக ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications