கர்நாடகா புத்தூர் கோயில் திருவிழாவுக்கு முஸ்லிம் அதிகாரியை அழைப்பதா? இந்து அமைப்புகள் எதிர்ப்பு
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் மங்களூர் அருகே உள்ள புத்தூர் மகாலிங்கேஸ்வரா கோவில் திருவிழாவுக்கு முஸ்லிம் அதிகாரி ஏ.பி. இப்ராஹிமை அழைக்க இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் ஒரு இந்திய அரசு அதிகாரியாக தாம் பணியாற்றுவதாகவும் இத்தகைய எதிர்ப்புகள் கவலை தருவதாகவும் தட்சிண கன்னடா நிர்வாக துணை ஆணையர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மங்களூருவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது புத்தூர் மகாலிங்கேஸ்வரா கோவில். இது 12-ம் நூற்றாண்டு கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு திருவிழாவுக்கு தட்சின கன்னடா நிர்வாக துணை ஆணையர் இப்ராஹிம் ஐ.ஏ.எஸ், உள்ளூர் எம்.எல்.ஏ. ஆகியோர் பெயர்களுடன் அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் இந்து கோவில் திருவிழாவுக்கு முஸ்லிம் அதிகாரி இப்ராஹிமை எப்படி அழைக்கலாம் என பஜ்ரங் தள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
துணை ஆணையர் இப்ராஹிம் பெயரை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாகவும் அந்த அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த துணை ஆணையர் இப்ராஹிம் ஐ.ஏ.எஸ், நான் மதம் சார்ந்த கண்ணோட்டத்துடன் அணுகுவது இல்லை. இத்தகைய எதிர்ப்புகள் கவலை தருகின்றன. ஒரு இந்திய அரசு அதிகாரியாகவே என்னுடைய கடமையை செய்து வருகிறேன்.
இப்போது மட்டுமல்ல... ஏற்கனவே இந்து கோவில் திருவிழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அத்தகைய திருவிழாக்களுக்கு சென்றதில் எனக்கு எந்த பிரச்சனையும் வந்தது இல்லை. இன்னும் சொல்லப் போனால் இந்து கோவில்களுக்கு நான் முக்கியத்துவம் அளித்தே வந்தும் இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இருப்பினும் இந்துத்துவா அமைப்புகள் இப்ராஹிம் ஐ.ஏ.எஸ் பெயரை நீக்கியாக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications