மோடி கழுத்து, கையை வெட்டி வீசவும் கூட ஏகப்பட்ட பீகாரிகள் இருக்காங்க... ராப்ரி தேவி 'பகீர்’
பீகாரிகளின் கைகளை வெட்டினால் நாங்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்கமாட்டோம்.... மோடியின் கழுத்தையும் கையையும் வெட்ட பீகாரிகள் தயாராக இருக்கிறார்கள் என்கிறார் ராப்ரி தேவி.
பாட்னா: பிரதமர் மோடியின் கழுத்தையையும் கையையும் வெட்டி வீசுவதற்கு பீகாரில் நிறைய பேர் தயாராக இருக்கின்றனர் என அம்மாநில முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
பீகார் பாஜக தலைவர் நித்யானந்த் ராய் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பிரதமர் மோடிக்கு எதிராக கையை உயர்த்தினால் கையையும் விரல்களையும் வெட்டி எறிந்துவிடுவோம் என ஆவேசமாக கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து தாம் பேசியதற்காக நித்யானந்த் ராய் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதனிடையே நித்யானந்த் ராய்-க்கு பதிலளிக்கும் வகையில் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தைரியம் இருந்தால் பீகார் மக்கள் மீது கையையும் விரல்களையும் வெட்டி பாருங்களேன்... அப்போது என்ன பீகாரிகள் அமைதியாக இருப்பார்கள் என நினைத்தீர்களா?
எங்களுக்கு என்ன நடக்கிறதோ அதுதான் பிரதமர் மோடிக்கும் நடக்கும். மோடியோட கழுத்தையும் கையையும் வெட்டி வீச பீகாரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என ஆவேசம் காட்டியிருக்கிறார் ராப்ரி தேவி.