தேர்தல் அரசியலில் இரோம் ஷர்மிளா ஈடுபட மணிப்பூர் பிரிவினைவாத அமைப்பு கடும் எதிர்ப்பு
இம்பால்: மனித உரிமைகளுக்காக போராடி வரும் இரோம் ஷர்மிளா தேர்தல் அரசியலில் ஈடுபடுவதற்கும் மணிப்பூரைச் சேராத ஒருவரை திருமணம் செய்யவும் ஏ.எஸ்.யூ.கே என்ற மணிப்பூர் தனிநாடு கோரும் பிரிவினைவாத அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கடந்த 16 ஆண்டுகாலமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்தார் இரோம் ஷர்மிளா. அண்மையில் தம்முடைய கோரிக்கையை மத்திய அரசுகள் ஏற்காததால் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.
மேலும் திருமணம் செய்து கொண்டு தேர்தல் அரசியலில் ஈடுபடப் போவதாகவும் இரோம் ஷர்மிளா அறிவித்திருந்தார். இரோம் ஷர்மிளாவை முன்னிறுத்தி மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் மணிப்பூர் தனிநாடு கோரும் ஏ.எஸ்.யூ.கே என்ற பிரிவினைவாத அமைப்பு இரோம் ஷர்மிளாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் அரசியலை நோக்கிச் சென்ற அனைவருக்குமே அது ஒரு முட்டுச்சந்து என தெரியும். இரோம் ஷர்மிளா திருமணம் செய்ய உள்ள நபர் மணிப்பூர் தேசிய இனத்தைச் சேராதவர். ஆகையால் தேர்தல் அரசியலில் ஈடுபடாமல், இரோம் ஷர்மிளா தன்னுடைய போராட்டத்தைத் தொடர வேண்டும் என எச்சரித்துள்ளது.