ஜார்கண்ட் முதல்வராக ரகுபர்தாஸ் தேர்வு.... பழங்குடியினத்தைச் சேராத முதல் முதல்வர்!
ராஞ்சி: ஜார்கண்ட் மாநில பாஜக சட்டசபை குழு தலைவராக ரகுபர்தாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த மாநிலத்தின் 10 வது முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். பழங்குடி இனத்தைச் சேராத முதல் முதல்வர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரகுபர்தாஸ்.
ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 81 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி 42 இடங்களைப் பிடித்து ஆட்சியமைத்துள்ளது. இந்த கட்சிக்கு ஜார்கண்ட் விகாஸ் முக்தி மோர்ச்சா நிபந்தனையற்ற தனது முழு ஆதரவை தருவதாக அறிவித்துள்ளது.

புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தலைமையில் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரகுபர் தாஸை சட்டமன்ற பாரதிய ஜனதா கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
ரகுபர்தாஸ் ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வராக பதவியேற்க உள்ள பழங்குடி இனத்தவரல்லாத முதல் தலைவர் ஆவார். பாரதிய ஜனதா சார்பில் முதல்வராக அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதல்வர்கள் அர்ஜூன் முண்டாவும், பாபுலால் மராண்டியும் தேர்தலில் தோல்வியடைந்ததால், ரகுபர் தாஸ் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் பாஜக துணை தலைவராக பதவி வகித்து வரும் ரகுபர்தாஸ் கடந்த 2009 முதல் 10 வரை துணை முதல்வராக இருந்தார்.
59 வயதாகும் ரகுபர்தாஸ் 1955 ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி பிறந்தவர். பிஎஸ்சி பட்டதாரியான இவர்,டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். பாஜக சார்பில் போட்டியிட்டு நான்கு முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநில பாஜக துணைத்தலைவராக இருக்கும் இவர், மாநில அமைச்சராகவும், ஜார்கண்ட் மாநில துணை முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தை பொறுத்தவரை மலை வாழ் இனத்தை சேர்ந்த ஒருவரே எப்போதும் முதல்வராக வருவது வழக்கம் ரகுபர்தாஸ் இதனை முறியடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications