அமேதி, ரேபரேலியில் 'நேரு குடும்பம்' போட்டியிடவே கூடாது- தடை விதித்தாரா ராகுல் காந்தி?
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி லோக்சபா தொகுதிகளில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூட போட்டியிடவே கூடாது என கறார் தடையை விதித்ததே ராகுல் காந்திதான் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
அமேதி, ரேபரேலி தொகுதிகளில்தான் இந்திரா குடும்பம் தொடர்ந்து போட்டியிட்டு வென்று வந்தது. 2019-ல் அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோல்வியைத் தழுவினார். இது ஒட்டுமொத்த இந்திரா குடும்பத்துக்கும் பெரும் அதிர்ச்சியை ஏர்படுத்தியது.

தற்போதைய தேர்தலில் ரேபரேலியில் சோனியா காந்தி மீண்டும் போட்டியிடவில்லை. ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்பியாகிவிட்டார் சோனியா. கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிட்டார். அங்கு கடந்த மாதம் 26-ந் தேதி வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டது.
லோக்சபா தேர்தலின் 5-வது கட்டமாக மே 20-ந் தேதி அமேதி, ரேபரேலியில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. ஆனால் இந்த நிமிடம் வரை அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
ரேபரேலி, அமேதி காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன. ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இருவருமே அமேதி- ரேபரேலியில் போட்டியிட விரும்பவில்லை என கூறப்படுகிறது. அமேதியில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தாம் போட்டியிட்டே தீர வேண்டும் என பிடிவாதம் பிடிப்பதால் இதை தவிர்க்க வேண்டும் என ராகுல் காந்தி நினைக்கிறாராம். அத்துடன் இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாருமே இந்த முறை அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடாமல் ஒதுங்கியே நிற்கலாம் என்பதும் ராகுல் காந்தியின் கறாரான நிலைப்பாடாம். இதனை சோனியா காந்தி ஏற்க மறுத்து மகன் ராகுல், மகள் பிரியங்காவை போட்டியிட உத்தரவிட்டிருந்தாராம். ஆனாலும் ராகுல் காந்தி இதில் இறங்கிப் போகாமல் இருக்கிறார்.. இதுதான் இழுபறிக்கு காரணம் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள். இன்றைக்குள் அமேதி, ரேபரேலி வேட்பாளர்களைகாங்கிரஸ் மேலிடம் அறிவித்தாக வேண்டிய கட்டாயமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications