ஒரு சில தொழிலதிபர்களுக்கு சாதகமாக மட்டும் மோடி பணிபுரிகிறார்: ராகுல் தாக்கு
ஃபிர்ஜோபுர்: நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி ஒரு சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே பணிபுரிகிறவராக மாறிவிட்டார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
ஹரியானாவில் இன்று சட்டசபை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி குறியதாவது:
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக அந்நாட்டு நிறுவனங்களை மகிழ்விக்கும் வகையிலான முடிவுகளை மோடி மேற்கொண்டார். மருந்து விலைகள் மீதான கட்டுப்பாட்டை மோடி தளர்த்திவிட்டுதான் அமெரிக்கா சென்றார்.

இதனால் ரூ8 ஆயிரத்துக்கு விற்பனை செய்து கொண்டிருந்த புற்றுநோய்க்கான மருந்துகள் விலை ரூ1 லட்சம் வரை உயர்ந்துவிட்டன. இதேபோல் நீரிழிவு நோய்க்கான மருந்துகளின் விலையும் உயர்ந்துவிட்டன.
மோடியைப் பொறுத்தவரை ஒரு சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே பணியாற்றி வருகிறார். விரைவில் அவர்களால்தான் இந்த நாடே நடத்தப்படும் சூநிலை உருவாகும்.
ஹரியானாவை ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி செய்தது குறித்து காங்கிரஸ் கட்சி பெருமைப்படுகிறது. பால் உற்பத்தியில் நாட்டிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது ஹரியானா.
காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டங்களை மோடி அரசு நலிவடைய செய்துவிட்டது. ஒரு அரசாங்கம் சந்தைப்படுத்துதலை செய்ய தேவையில்லை.. அரசாங்கம் என்பது ஏழைகளுக்கானது.. இந்த நாட்டில் முதலாளிகளும் பெரு நிறுவனங்களும்தான் இனி அரசாங்கத்தை நடத்தப் போகிறது.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications