கோஷ்டி பூசல் வேண்டாம்: ஒற்றுமையுடன் தேர்தலை சந்தியுங்கள்; கேரளா காங்கிரஸாருக்கு ராகுல் அட்வைஸ் !
திருவனந்தபுரம்: கோஷ்டி பூசலை விட்டுவிட்டு தேர்தலில் வெற்றிபெற ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் அறிவுரை வழங்கியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் கேரள மாநில காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். கேரளத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்திகளை வகுப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

உம்மன்சாண்டிக்கு எதிர்ப்பு:
மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள மதுபார் ஊழல், சூரிய மின்சக்தி ஊழல்களால் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே வருகிற தேர்தலில் முதல்வர் உம்மன்சாண்டிக்கு பதிலாக வேறு ஒருவரின் தலைமையில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு குரல்கள் எழுப்பியுள்ளனர். ஆனால் அகில இந்திய காங்கிரஸ் தலைமையோ, முதல்வர் உம்மன்சாண்டிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
ராகுல் காந்தி பேச்சு:
ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்து ஹிந்து-முஸ்லிம் இடையே பிளவை ஏற்படுத்தும் பிரசாரத்தை மேற்கொண்டு மக்களின் மனதில் விஷத்தை விதைப்பதும், அதன் மூலம் தேர்தலில் வெற்றி பெறுவதும்தான் பிரதமர் மோடியின் அரசியலாகும். பிகாரில் மெகா கூட்டணி பாஜகவை தோற்கடித்ததுபோல அடுத்து தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து மாநிலங்களும் பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.
ஒற்றுமையுடன் பாடுபடுங்கள்
காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு இடையே உள்ள மோதல்கள், கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு தேர்தல் வெற்றிக்காக ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும். கேரளத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முடியாது. ஆனால், காங்கிரஸ் கட்சியினரால் வேண்டுமானால் காங்கிரஸை தோற்கடிக்க முடியும்.
உட்கட்சி பூசல் வேண்டாம்:
நமக்குள்ளே சண்டையிட்டு, உட்கட்சி பூசலில் ஈடுபடுவதற்கான நேரம் இதுவல்ல. வருகிற சட்டசபை தேர்தலை ஒற்றுமையுடன் சந்திக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதுதான் முக்கியம். அதற்காக குறைந்தபட்சம் இரண்டு, மூன்று மாதங்களுக்காவது அனைவரின் கைகளும் இணைய வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் நீங்கள் தாராளமாக சண்டையிட்டு கொள்ளலாம். உங்கள் குறைகளை கேட்க நானும் இங்கு வருவேன் என்றார் ராகுல்.












Click it and Unblock the Notifications