மணிப்பூரை விட்டாச்சு.. கவனமெல்லாம் அவருக்கு இஸ்ரேல் மேலதான்! பிரதமர் மோடியை விளாசிய ராகுல் காந்தி
ஐய்ஸ்வால்: வரும் நவம்பரில் மிசோரம் மாநில சட்டசபை தேர்தலை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இன்று அம்மாநிலத்தில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் மிசோரம் மாநிலமும் ஒன்று. இந்த மாநிலத்தில் மொத்தம் 40 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் டிசம்பர் மாதம் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த மாநிலத்தை பொறுத்த அளவில் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன. பாஜக பெயரளவில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி தேசிய அளவில், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்திருக்கிறது. எனவே பாஜகவும் முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது.

அதேபோல கடந்த 1987ம் ஆண்டு மிசோரம் யூனியன் பிரதேசத்திலிருந்து, மாநிலமாக பரிணமித்தது. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்திருக்கிறது. தற்போது மிசோ தேசிய முன்னணி ஆட்சியிருக்கிறது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மிசோரத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பேரணியில் பங்கேற்ற பின்னர் பேசிய அவர்,
"நான் சில நாட்களுக்கு முன்னர் மணிப்பூர் சென்றிருந்தேன். அங்கு மக்களை சந்தித்தேன். ஆனால் நிலைமை முற்றிலுமாக தலைகீழாக மாறியிருந்தது. மணிப்பூர் இரண்டாக பிளவுப்பட்டிருக்கிறது. அங்கு பெண்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் பிரதமர் அங்கு பயணம் செய்வதை முக்கியமானதாக கருதவில்லை. மணிப்பூரை விட இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்பதை அறிய பிரதமர் அதிக ஆர்வம் காட்டுகிறார்.
பாரத் ஜடோ யாத்திரை குறித்து பலரும் விமர்சனங்களை முன் வைக்கின்றனர். ஆனால் இந்த யாத்திரையின் நோக்கம் பரஸ்பர மரியாதை, சகிப்புத்தன்மை, மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல், மொழிகள் மற்றும் மதங்களிலிருந்து கற்றுக்கொள்வது, அன்பை ஒருங்கிணைக்கும் சக்தியாக ஏற்றுக்கொள்வது ஆகியவைதான் இந்த யாத்திரையின் நோக்கம்" என்று கூறியுள்ளார். முன்னதாக இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து பிரதமர் மோடி இஸ்ரேலுடன் நிற்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல் உருவானபோது அதற்கெதிராக ஐநாவில் வாக்களித்த சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அப்படி இருக்கையில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி மாற்றுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது ராகுல் காந்தி, "மணிப்பூரை விட இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்பதை அறிய பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டுகிறார்" என விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications