விடுப்பை நீட்டித்த ராகுல்: வார இறுதியில் தான் டெல்லி திரும்புகிறார்
டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தனது விடுப்பை நீட்டித்துள்ளார். அவர் இந்த வார இறுதியில் தான் டெல்லி திரும்புவார் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இரண்டு வாரம் விடுப்பு எடுத்துச் சென்றுள்ளார். அவர் பாங்காக் சென்றுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர் உத்தரகண்ட் மலைப் பகுதியில் இருப்பதாக காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கூறி புகைப்படத்தையும் வெளியிட்டார். ஆனால் ராகுல் உத்தரகண்டில் இல்லை என்று காங்கிரஸ் கூறியது.

விடுப்பு முடிந்து ராகுல் காந்தி இன்று டெல்லி திரும்புவார் என்று காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் அவர் விடுப்பை நீட்டித்துள்ளதாகவும் வார இறுதியில் தான் டெல்லி வருவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்தும் திட்டங்களுடன் திரும்பி வருவார் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் ராகுல் காந்தி கட்சியின் தலைவர் ஆக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி வாத்ராவுக்கு கட்சிப் பொறுப்பு அளிக்குமாறு தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் வேளையில் ராகுல் விடுப்பில் சென்றுள்ளது பற்றி சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications