நாளை காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவாரா?
டெல்லி: டெல்லியில் நாளை நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் ராகுல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படமாட்டார் என்று தெரிகிறது. தோல்வி பழியை சுமப்பதை தவிர்ப்பதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
லோக்சபாவுக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
பாரதிய ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரசைப் பொறுத்தவரை, மன்மோகன்சிங் 2 முறை தொடர்ச்சியாக பிரதமர் பதவி வகித்து விட்டார். மீண்டும் பிரதமராக பதவி ஏற்க விரும்பவில்லை என்று அவர் கூறிவிட்டார்.

ராகுல் பிரதமர் வேட்பாளர்?
இதையடுத்து, அனைவரின் பார்வையும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மீது விழுந்துள்ளது. அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

காங். கூட்டம்
இந்த சூழ்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம், நாளை நடைபெறுகிறது. அதில், ராகுல் காந்தி காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ராகுலும் கூட, காங்கிரஸ் கட்சியின் சிப்பாய். கட்சி எனக்கு என்ன பொறுப்பு அளித்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்று கூறினார்.

அறிவிப்பு இல்லை
இந்நிலையில், நாளைய கூட்டத்தில், ராகுல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட மாட்டார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தோல்வி பழியில் இருந்து தப்பிக்க திட்டம்
இந்த தேர்தல் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத தேர்தலாக காணப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தவுடன், அந்த பழி முழுவதும் ராகுல் மீது சுமத்தப்படும். எனவே, அவரை வேட்பாளராக நிறுத்துவது ‘ரிஸ்க்' ஆனது.
இதனால் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு பதிலாக தேர்தல் பிரசார பொறுப்பாளராகவோ, கட்சியின் செயல் தலைவராகவோ ராகுல் காந்தியை அறிவிக்கலாம் என்று ஒரு யோசனை காங்கிரசில் இருக்கிறதாம். இதனால் நாளைய கூட்டத்தில் ராகுல் காந்தி, தேர்தல் பிரசார பொறுப்பாளராகவோ, செயல் தலைவராகவோ அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications