கெஜ்ரிவாலுடன் சமரசம் செய்வதா?: ஷிண்டே மீது ராகுல் அதிருப்தி
டெல்லி: டெல்லி பிரச்சினையில் கெஜ்ரிவாலுடன் உள்துறை அமைச்சர் சமரசம் செய்து கொண்டது தவறு என்று ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தலைநகர் முடங்கும் அளவு கட்சியினருடன் வீதிக்கு வந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதை முடிவுக்கு கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே சமரசம் செய்தார். அதன்படி, கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு ஆளான போலீஸ் அதிகாரிகள் விடுமுறையில் அனுப்பப்பட்டனர்.
இதையடுத்து தனது போராட்டத்தை கைவிட்ட கெஜ்ரிவால், தனது போராட்டம் வெற்றி கண்டிருப்பதாக அவர் அறிவித்தார்.

இது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு ஷிண்டே மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த பிரச்சினையில் கெஜ்ரிவாலுடன் சமரசம் செய்வது குறித்து பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி என தலைவர்கள் யாருடனும் ஷிண்டே ஆலோசிக்க வில்லை என தெரிகிறது.
இந்த நிலையில், டெல்லியில் தனது வீட்டில் நடந்த கட்சியின் மூத்த தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில், கெஜ்ரிவால் விவகாரத்தில் மத்திய அரசு சமரசம் செய்து கொண்டிருக்கக்கூடாது என ராகுல் காந்தி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications