ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனம் மீது ரயில் மோதியது- டிரைவர் உயிர் தப்பினார்
இந்துப்பூர்: ராகுல்காந்தியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது ரயில் மோதிய விபத்தில் கார் டிரைவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஆந்திர மாநிலம் இந்துப்பூர் நகரில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றுகிறார்.
இதற்காக புட்டபர்த்திக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கும் ராகுல்காந்தி, அங்கிருந்து கார் மூலமாக இந்துப்பூர் செல்கிறார். இதையொட்டி அவர் பயணிக்கும் சாலைகள் நெடுங்கிலும் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறார்கள் ஆந்திர போலீசார்.
இதன் ஒருபகுதியாக பாதுகாப்பு ஒத்திகை இன்று மதியம் நடந்தது. ராகுல்காந்தியின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் அம்பாசிட்டர் கார் ஜாமர்களுடன் அங்குமிங்கும் சென்று வந்தது.
இந்த ஒத்திகையின்போது, இந்துப்பூரின் புறநகரான குத்தம் என்ற பகுதியில் ஆளில்லாத ரயில்பாதை ஒன்றை கடக்க முற்பட்டபோது தண்டவாளத்தின் நடுவில் கார் திடீரென நின்றுவிட்டது. அப்போது பெங்களூர் செல்லும் ரயில் அந்த பாதையில் வேகமாக வந்துகொண்டிருந்தது. ரயில் வருவதை பார்த்த டிரைவர் சமயோஜிதமாக யோசித்து உடனடியாக காரில் இருந்து கீழே குதித்தார். அவர் குதித்த அதே நேரத்தில் கார் மீது ரயில் மோதிவிட்டு சென்றது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.