தம்பி, ஓரமாப் போயி குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் சாப்பிடுங்க.. ராகுலை வாரிய ஆஸம் கான்
லக்னோ: உ.பியைச் சேர்ந்த சர்ச்சைப் பேச்சுக்களின் சொந்தக்காரரும் சமாஜ்வாடி தலைவரும், அமைச்சருமான ஆஸம்கான், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ரொம்பவே கிண்டலடித்துப் பேசியிருப்பது காங்கிரஸாருக்கு எரிச்சலைக் கிளப்பியுள்ளது.
ராகுல் காந்தி ஒரு குழந்தை. அவர் பேசாமல் மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டு அமைதியாக இருப்பதுதான் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளது காங்கிரஸாரை கொதிப்படைய வைத்துள்ளது.
உ.பி. மாநிலம் ராம்பூரில் அவர் பேசுகையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒரு குழந்தை. இன்னும் வளராமல் இருக்கிறார். அவரை யாரும் சீரியஸாகவே எடுத்துக் கொள்வதில்லை.
அங்குமிங்கும் போய் ஓடி விளையாடுகிறார் (பாதயாத்திரையைச் சொல்கிறார்) . இதனால் அவர் டயர்ட் ஆகி விட்டார். பேசாமல் அவர் மிட்டாய் டப்பாவை எடுத்துக் கொண்டு அமைதியாகப் போய் உட்கார்ந்து சாப்பிட வேண்டும். தன்னைப் போன்ற மற்ற குழந்தைகளுக்கும் கொடுத்து பகிர்ந்துண்டு விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார் ஆஸம் கான்.
ஆஸம்கானின் இந்தப் பேச்சால் காங்கிரஸார் கடுப்பாகியுள்ளனர். இது வரம்பு மீறிய பேச்சு என்று ஆஸம்கானுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை ராகுல் காந்தி புன்டல்காண்ட் பகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார் என்பது நினைவிருக்கலாம். அப்போது அவர் பேசுகையில், சமாஜ்வாடி வாடி அரசை விமர்சித்துப் பேசியிருந்தார்.