சாதி இடஒதுக்கீடுக்கு முற்றுப்புள்ளி, பொருளாதார இட ஒதுக்கீடு வேண்டும்: ஜனார்த்தன் திவிவேதி
டெல்லி: சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு ராகுல் வழி வகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜனார்த்தன் திவிவேதி.
சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடுக்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடி வகுப்பினரின் முன்னேற்றத்துக்காக அவர்களுக்கான இடஒதுக்கீடுக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் கூட இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பேசியிருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜனார்த்தன் திவிவேதி, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டைக் கொண்டு வர வேண்டும் என சர்ச்சைக்குக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து ஜனார்த்தன் திவிவேதி கூறியதாவது:-
இப்போதைய இடஒதுக்கீடு முறையை (சாதி அடிப்படையிலானது) முடிவுக்கு கொண்டு வரவேண்டும். சுயநலவாதிகளால் தான் இது இதுவரை நடக்காமல் போய்விட்டது. தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகிய இனங்களில் உண்மையிலேயே தேவைப்படுகிறவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்கிறதா? இந்த வகுப்புகளில் மேல்தட்டில் இருக்கிறவர்கள் தான் இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வருகின்றனர்.
சமூக நீதிக்கும், சாதிய முறைக்கும் வித்தியாசம் உண்டு. சமூக நீதி என்ற கருப்பொருள் தான் இப்போது சாதிய முறையாக மாறிவிட்டது. இந்த முறையை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு பொதுமக்களின் கருத்துக்களை ராகுல் காந்தி நேரிடையாக கேட்டுள்ளார். நான் இப்போது அவரை வலியுறுத்துகிறேன். இதுதொடர்பாக அவர் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும். எல்லா வகுப்பினரையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வந்து பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு பற்றி பேசப்பட வேண்டும். காங்கிரசின் எதிர்காலத்தலைவர் ராகுல் காந்திதான். அவர் தான் நாட்டின் எதிர்காலத்தலைவர். அப்போது தான் (பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வந்தால்தான்) சமத்துவ அடிப்படையிலான ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.சாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நான் கூறுவதற்கு காரணம் உண்டு. காலங்கள் மாறி இருக்கின்றன. தற்போது சாதிய முறைக்கு வெளிப்படையாக வக்கலாத்து வாங்குகிற தார்மீக துணிச்சல் யாருக்கும் கிடையாது.1960-களில் சாதியத் தடைகளை தகர்த்து எறிய உருவான இளைஞர் இயக்கத்தின் மூலம் தான் நான் அரசியலுக்கு வந்தேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications