வெறும் கோஷத்தால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது... 'தூய்மை இந்தியா' பற்றி ராகுல் தாக்கு
மும்பை: 'தூய்மை இந்தியா' என கோஷம் போடுவதால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை மான்கூர்டு பகுதியில் உள்ள தேவ்னார் குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இதனை மூட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று இந்த குப்பைக்கிடங்கை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- குப்பைக் கிடங்கு தீ விபத்து காரணமாக, பொதுமக்கள் காசநோயால் பாதிக்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இங்கிருந்து வெளியான விஷவாயு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு குழந்தை உயிரிழந்ததாக கூறுகின்றனர்.
ஆனால், இதனை அதிகாரிகள் மறுக்கின்றனர். வெறுமனே ‘தூய்மை இந்தியா' என்று கோஷம் போடுவதால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது. எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. நீங்கள் (மத்திய அரசு) செயல்திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். யுக்திகளை வகுக்க வேண்டும்.
‘தூய்மை இந்தியா' என்று கோஷமிடுவதும், நாட்டை சுத்தமாக வைத்திருப்பதும் முற்றிலும் வேறுபட்ட விஷயங்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக, நாட்டை சுத்தமாக வைத்திருக்கவும், இதுபோன்ற அச்சுறுத்தல்களில் இருந்து பொதுமக்களை விடுவிக்கவும் எந்தவொரு இலக்கும், யுக்தியும் வகுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த விவகாரத்தில் பிரதமரும், மாநில முதல்வரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.