வாரிசு அரசியலை எதிர்க்கிறேன்.. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெல்லும்: ராகுல் காந்தி பேட்டி
காங்கிரஸ் தலைவர் சோனியாவோ அல்லது ராகுல் காந்தியோ பொதுவாக அக்குடும்பத்தினர் யாரும் தொலைக்காட்சிகளில் தனிப்பட்ட முறையில் பேட்டி கொடுப்பது இல்லை.
ஆனால் இப்போது அந்த இறுக்கத்தை தளர்த்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு ராகுல் காந்தி பேட்டி அளித்திருக்கிறார்.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு ராகுல் காந்தி இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
யார் பிரதமர் என்பதை காங்கிரஸ் கட்சி எம்.பிக்களே தீர்மானிப்பர். அதை முன்கூட்டியே தீர்மானிப்பது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது,.
என் பாட்டி, என் அப்பாவின் மரணத்தை பார்த்த எனக்கு அச்சம் என்பது இல்லை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த அச்சப்படவில்லை.
குஜராத் கலவரத்துக்கு மோடிதான் பொறுப்பு
அகமதாபாத்தில் ஆயிரக்கணக்கானோர் படுகொலைக்கு காரணமானவர் நரேந்திர மோடி என்று பிரதமர் மன்மோகன்சிங் பேசியது சரிதான். 2002ஆம் ஆண்டு குஜராத்தில் வன்முறை நடைபெற்ற போது அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் பொறுப்பு.
2002 குஜராத் வன்முறையில் மோடி அரசு ஈடுபட்டதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். உங்கள் சக பத்திரிகையாளர்களே தெரிவித்தனர்.
சீக்கியர் படுகொலை
1984 ஆம் ஆண்டு இந்திரா மறைவைத் தொடர்ந்து நிகழ்ந்த சீக்கியர்கள் மீதான தாக்குதலும் 2002-ல் நிகழ்ந்த குஜராத் கலவரமும் வேறு வேறானவை. 1984ஆம் ஆண்டு சீக்கியர் படுகொலையில் சில காங்கிரஸாருக்கு தொடர்பு உண்டுதான்.
ஆனால் 1984ஆம் ஆண்டு சீக்கியர் படுகொலையை ராஜிவ்காந்தி அரசு தடுக்க முயற்சித்தது. ஆனால் 2002ஆம் ஆண்டு குஜராத் படுகொலையை மோடி அரசே நிகழ்த்தியது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து அரசியல் கட்சிகள் வர வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து உருவாக வேண்டும்.
ஊழல்வாதிகளுக்கு தண்டனை
ஊழல் விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், நிலக்கரி ஊழல் தொடர்பாக பிரதமருடன் விவாதித்தேன்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டாலும் லாலு பிரசாத் யாதவ் கட்சியுடன் கூட்டணி தொடரலாம். ஏனெனில் கூட்டணி என்பது தனிநபர்களைப் பொறுத்தது அல்ல- கட்சிகளைப் பொறுத்ததே.
ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவு
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு ஆதரவு தெரிவித்தது காங்கிரஸுக்கு தேவையில்லாத ஒன்று என்பது சரியல்ல. அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
பொதுவாக பல மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்ற போது என்னை குறிப்பிடுவதில்லை. ஆனால் சில மாநிலங்களில் தோற்கும் போது என்னை பொறுப்பாக்குகின்றனர்.
2014 தேர்தலில் காங்கிரஸ் வெல்லாவிட்டால் நானே முழு பொறுப்பு.
வாரிசு அரசியல்
வாரிசு அரசியல் என்பது காங்கிரஸ், பாஜக, திமுக என அனைத்து கட்சிகளிலுமே இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை வாரிசு அரசியலை எதிர்க்கிறேன். இந்த குடும்பத்தில் நானா பிறக்க வேண்டும் என்று விரும்பினேன்..
சு.சுவாமிக்கு மறுப்பு
கேம்பிரிட்ஜ், ஹார்வார்டில் நான் படிக்கவில்லை என சுப்பிரமணியன் சுவாமி சொல்வது தவறு. 40 ஆண்டுகாலமாக சுப்பிரமணியன் சுவாமி எங்கள் குடும்பத்தை விமர்சித்து வருகிறார்.
பணத்துக்காகவோ, அதிகாரத்துக்காகவோ அரசியலுக்கு நான் வரவில்லை. நான் படித்து வாங்கிய பட்டத்தை காட்ட வெளியிடவும் நான் தயார்.
கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் வளர்ச்சியை நாட்டில் உருவாக்கி இருக்கிறோம். 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெல்லும்.
இவ்வாறு ராகுல் காந்தி அந்த பேட்டியில் தெரிவித்தார்.