அது போன மாதம்.. இது இந்த மாதம்.. செப்டம்பரில் காங். தலைவராகிறாராம் ராகுல்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக வரும் செப்டம்பர் மாதம் ராகுல் காந்தி பொறுப்பேற்பார் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி திடீரென் 56 நாட்கள் லீவு போட்டுவிட்டு அரசியல் துறவறம் போனார்.. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால் நாடு திரும்பிய ராகுல் காந்தி அரசியல் முதிர்ச்சி பெற்றவராக அதிரடியாக அரசியலில் களமாடி வருகிறார். நாடாளுமன்றமானாலும் அரசியல் பொதுக்கூட்டங்களானாலும் வெளுத்து வாங்கி வருகிறார் ராகுல்.
இதனால் ராகுல் காந்தி இந்த மாதம் கட்சித் தலைவராகிவிடுவார்.. அடுத்த மாதம் தலைவராகிவிடுவார் என காங்கிரஸ் தொண்டர்கள் இலவு காத்த கிளியாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 84-வது கூட்டம் நடைபெறுகிறது. பெங்களூருவில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் ராகுல் தனது தயாருக்கு பதில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பு ஏற்று கொள்வார் என கூறப்படுகிறது.
இந்த எதிர்பார்ப்பாவது நடக்குமா?