திரிபுராவில் என்னுடைய பார்முலாவை ஏற்று கூட்டணி வைக்காமல் போனதால் காங். படுதோல்வி: மமதா பானர்ஜி
திரிபுராவில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் கூட்டணி வைக்காமல் போனதாலேயே படுதோல்வியை தழுவ நேரிட்டது என்கிறார் மமதா பானர்ஜி.
கொல்கத்தா: திரிபுராவில் சரியான கூட்டணியை அமைக்க தவறியதாலேயே காங்கிரஸ் படுமோசமான தோல்வியைத் தழுவியது என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மமதா பானர்ஜி கூறியதாவது:
திரிபுராவில் இடதுசாரிகள் பாஜகவிடம் சரணடைந்துவிட்டனர். மத்திய விசாரணை அமைப்புகளால் சிபிஎம் தலைவர்கள் மிரட்டப்பட்டனரா? என்பதும் தெரியவில்லை.
5% வாக்கு வித்தியாசம்
பாஜகவை கடுமையாக எதிர்க்காமல் இடதுசாரிகள் சரணடைந்ததால் ஆட்சியை இழந்துள்ளனர். சிபிஎம்-க்கும் பாஜக கூட்டணிக்கும் இடையே 5% வாக்குகள்தான் வித்தியாசம்.
2 லோக்சபா சீட்தான்
லோக்சபா தொகுதிகளைப் பொறுத்தவரை திரிபுராவில் 2 இடங்களைத்தான் பாஜக பெற்றிருக்கிறது. இது கொண்டாடப்பட கூடிய வெற்றி அல்ல.
பாஜக வெல்ல முடியாது
இத்தேர்தல் முடிவுகள் இனிவரும் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தாது. பாஜகவால் மேற்கு வங்கம், ஒடிஷாவில் ஆட்சியை கைப்பற்ற முடியாது. கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்களில் பாஜக படுதோல்வியைத்தான் தழுவும். கரப்பான்பூச்சி மயில் போல மாற கனவு காணலாம். ஆனால் மயில் ஆகிவிடவே முடியாது.
ராகுல் நிராகரித்த கூட்டணி
திரிபுராவில் காங்கிரஸ் 30; திரிணாமுல் காங்கிரஸ் 14; பழங்குடி மக்கள் கட்சிகளுக்கு 16 இடங்கள் என ஒரு பார்முலா உருவாக்கப்பட்டது. கடைசி நேரத்தில் காங்கிரஸ் மேலிடம் இதை நிராகரித்தது. அதனால் சரியான கூட்டணி அமையவில்லை. இதுதான் காங்கிரஸ் தோல்விக்குக் காரணம்.
இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.