மிஸ்டர் மோடி சார்! இந்தியாவிலும் கொஞ்சம் 'டூர்' போங்க... பொளந்து கட்டும் 'ரிட்டர்ன்' ராகுல்..
டெல்லி: வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிலும் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும் என்று லோக்சபாவில் மீண்டும் கலாய்த்திருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்.
லோக்சபா தேர்தல், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களில் படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்தது. இதனால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக கட்சியில் கலகக் குரல் வெடித்தது.
இந்த நிலையில் திடீரென அரசியல் பணிகளுக்கு லீவ் போட்டுவிட்டு சென்றார் ராகுல் காந்தி. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. அவர் எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? என்பது யாருக்கும் தெரியாமல் பலத்த சர்ச்சையாக ஓடிக் கொண்டிருந்தது.
மொத்தம் 56 நாட்கள் லீவுக்குப் பின்னர் திரும்பி வந்த ராகுல் காந்தி, முன்னைவிட நல்ல மெச்சூரிட்டியாக செயல்பட்டு வருகிறார். நாடாளுமன்றங்களில் 'துணிந்து' பேசுவதுடன் ஆணித்தரமாகவும் கருத்துகளை முன்வைத்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில விவசாயிகள் குறைகளைக் கேட்க ரயில் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று லோக்சபாவில் விவசாயிகள் குறித்து ராகுல் காந்தி பேசியதாவது:
இந்த அரசாங்கம் உங்களுடையது.. இந்த அரசு நம்முடையது.. ஆனால் ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான அரசு அல்ல.. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது உங்களுடைய அரசு விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்கவில்லை.. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவில் "சுற்றுப் பயணம்" செய்து கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்துக்கும் செல்ல வேண்டும். அங்குள்ள யதார்த்த நிலைமைகளை விவசாயிகள் நிலைமையை அவர் பார்வையிட வேண்டும்.
மேக் இன் இந்தியா பற்றி பேசுகிறீர்கள்... இந்த தொலை நோக்கு திட்டத்தில் ஏழை விவசாயிகளுக்கு இடம் இருக்கிறதா?
மத்திய அரசு தானியங்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யவில்லை. இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் பிரச்னையில் இந்த அரசு கண்களை மூடிக் கொண்டிருக்கிறது... இந்த மேக் இன் இந்தியா திட்டம் முதலாளிகளுக்கானது மட்டுமே..
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
ராகுலின் இந்த தடாலடி பேச்சு லோக்சபாவில் சலசலப்பை ஏற்படுத்தியது.