டெல்லி - சென்னை புல்லட் ரயில் திட்டத்தைத் தொடங்குங்கள்.. மோடிக்கு நெருக்கடி தரும் சீனா
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு வருகை தருவதற்கு முன்பு டெல்லி - சென்னை இடையிலான புல்லட் ரயில் திட்டத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவுக்கு நெருக்குதல் கொடுத்து வருகிறதாம் சீனா.
இந்த வார இறுதியில் சீனா செல்கிறார் மோடி. இந்த நிலையில்தான் அவர் இங்கு வருவதற்கு முன்பு புல்லட் ரயில் திட்டத்தைத் தொடங்கி வைக்குமாறு இந்தியாவை நெருக்கி வருகிறதாம்.
சீனாதான் இந்தத் திட்டத்திற்கான சாத்தியக் கூறுகள் குறித்த ஆய்வை மேற்கொகண்டு வருகிறது. 36 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. தற்போது பைலட் திட்டம் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. இதை வைத்து திட்டத்தைத் தொடங்குமாறு தற்போது இந்தியாவிடம் கூறி வருகிறதாம் சீனா.

இந்தத் திட்டம் தவிர சென்னை - பெங்களூரு புல்லட் ரயில் திட்டத்தையும், இந்தியா, சீனாவின் உதவியோடு மேற்கொள்ளவுள்ளது.
ஒருபக்கம் எல்லைப் பிரச்சினை இருந்தாலும் கூட இந்தியாவின் பொருளாதார உயர்வுக்கு உதவும் இதுபோன்ற திட்டத்தில் சீனா மிகுந்த ஆர்வம் செலுத்தி, இந்தியாவையும் வேகமாக செயல்படுமாறு தட்டிக் கொடுத்து ஊக்குவிப்பது வியப்புக்குரிய ஒன்றாகும்.
இந்தியா, சீனா இடையே இரு நாட்டு எல்லைப் பிரச்சினை, ஜப்பானுடன் இந்தியா நெருக்கமான நட்பு கொண்டிருப்பது தொடர்பான எரிச்சல், அமெரிக்காவுடன் நெருங்கிய உறவால் வந்த எரிச்சல் என பல பிரச்சினைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் சீன பயணத்தின்போது அவரும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் எல்லைப் பிரச்சினை குறித்து முக்கியமாக விவாதிக்கவுள்ளனர். கடந்த 13 வருடமாக இதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வருவது நினைவிருக்கலாம்.
இருப்பினும் உலக அளவில் படு வேகமாக வரும் பொருளாதாரா சக்தியாக சீனாவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இந்தியா முன்னணியில் போய்க் கொண்டிருக்கிறது. எனவே இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்புக்கும் சீனா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
மோடி நாளை சீனா போய்ச் சேருகிறார். இதற்கு முன்பு இந்தியத் தலைவர்கள் மேற்கொண்ட அணுகுமுறைகளை ஓரம் கட்டி விட்டு முற்றிலும் புதிய அணுகுமுறையுடன் சீனாவைப் பார்க்கிரார் மோடி என்று வெளிநாட்டு கொள்கை தொடர்பான ஆயவாளர் சி.ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications