பெங்களூரில் 2வது நாளாக கொட்டும் மழை! கத்திரி வெயிலில் தப்பிய மகிழ்ச்சியில் மக்கள்
பெங்களூர்: பூங்கா நகரமான பெங்களூரில் இன்று இரண்டாவது நாளாக மழை பெய்தது மக்களை மகிழ்வித்துள்ளது.
கடந்த வாரத்தில் கடுமையான வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட 'ஏர்கன்டிஷன்' சிட்டியான பெங்களூர்வாசிகளுக்கு இந்த வாரம், மழை வாரம். நேற்று இரவு 7 மணிக்கு மேல் நகரின் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து இரவு நேர வெப்ப நிலையை குளிர்ச்சியாக்கியது.
இந்நிலையில், இன்று வருண பகவான், மாலை நேரத்திலேயே பெங்களூர் நகர மக்களுக்கு காட்சி தந்தார். எம்ஜிரோடு, ஜெயநகர், பத்மநாபநகர் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளிலும், பலத்த காற்றுடன் சில நிமிட நேரங்களுக்கு கன மழை கொட்டியது.
முன்னதாக காலை முதல் கடுமையான புழுக்கத்தால் மக்கள் அவதிப்பட்டனர். அப்போதே மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி பெய்துள்ளது. மாலை முதல் கருமேகங்கள் வானில் திரண்டிருந்ததால் சில் என்ற வானிலை நிலவுகிறது.