ஆந்திரா, ஓடிசா கனமழை: பலி 55ஆக உயர்வு... லட்சக்கணக்கானோர் தவிப்பு
ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் ஒடிசாவில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. மழை வெள்ளத்தினால் லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
ஆந்திராவில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் கனமழையால் 9 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஐந்தரை லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்துள்ளன.
48 மணி நேரத்திற்கு பலத்த மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

55 பேர் பலி
பிரகாசம், ஐதராபாத், குண்டூர் உள்ளிட்ட 9 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழைக்கு 32 பேர் பலியாகி உள்ளனர்.இதேபோல், ஒடிசாவில் 16 பேரும், மேற்கு வங்கத்தில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மக்கள் தவிப்பு
ஒடிஷாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கானோர் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு
லட்சக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 3 மாநிலங்களிலும் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து
கனமழை காரணமாக 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நேற்று இரவு 7 மணிக்கு புறப்பட இருந்த சென்ட்ரல்-ஹவுரா கோரமண்டல் ரயில் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், திங்களன்று காலை 8.45 மணிக்கு புறப்பட வேண்டிய சென்ட்ரல்-ஹவுரா கோரமண்டல் ரயிலும், இரவு 11.40க்கு புறப்பட வேண்டிய சென்ட்ரல்-ஹவுரா மெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மழை தொடரும்
இந்நிலையில், அடுத்த 48 மணிநேரத்திற்கு பலத்த மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications