மாணவிகளை பலாத்காரம் செய்ய முயற்சி... அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது
ராய்ப்பூர்: மாணவிகளைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக சட்டீஸ்கரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலம், உர்லா மாவட்டத்தில் உள்ள சரோரா கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார் அரவிந்த் திவாரி (36). மேல்நிலை வகுப்புகளுக்கு ஆங்கில் பாடம் எடுத்து வரும் அரவிந்த் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
வகுப்பு நேரத்தில் அநாகரீகமான முறையிலும், பாலியல் வக்கிரத்துடனும் அரவிந்த் நடந்து கொள்வதாகவும் சில வேளைகளில் பலாத்காரம் செய்ய முற்பட்டதாகவும் 16 வயதுக்குட்பட்ட மாணவிகள் சிலர் தங்களது பெற்றோரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் வாக்குமூலங்களை பெற்ற போலீசார், தலைமை ஆசிரியர் அரவிந்த் திவாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.