ராஜஸ்தான் மாநிலத்தில் கோர விபத்து.. லாரி மீது மோதிய வேன்.. சுற்றுலா சென்ற 18 பேர் பலி!
ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் பாரத் மாலா விரைவுச் சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது டெம்போ டிராவலர் வேன் ஒன்று மோதியதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோத்பூரில் இருந்து 220 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் ஒன்றுக்கு டெம்போ டிராவலரில் திரும்பிக் கொண்டிருந்த போது, பாரத் மலா தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிகானரில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் வந்த பேருந்து, பலோடி மாவட்டத்தின் பாபினி கிராமத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதிவேகமாக வந்த டெம்போ டிராவலர் வேன், சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியுள்ளது. இதில் வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது. இந்த விபத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அந்த நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், அங்கு வந்த போலீசார், மீட்புக் குழுவினர் வேனுக்குள் சிக்கியிருந்த உடல்களையும், காயம் அடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கோர விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் நொறுங்கிய வாகனத்தின் சீட்களுக்கு இடையே சிக்கி இருந்ததால் மீட்புப் பணியில் கடும் சிரமம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களுக்கு ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் கமிஷ்னர் ஓம் பிரகாஷ் பாஸ்வான் கூறுகையில், "சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். காயமடைந்தவர்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் நிர்வாகம் கவனம் செலுத்துகிறது." என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் ஷர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். "இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications