ஆரம்பமே 'அமர்க்களம்'!பாஜக தேர்தல் குழுக்களில் வசுந்தர ராஜே சிந்தியா புறக்கணிப்பு- ஆதரவாளர்கள் ஷாக்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலுக்கான 2 குழுக்களை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. இந்த 2 தேர்தல் குழுக்களிலும் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா புறக்கணிக்கப்பட்டிருப்பதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கான தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிரான அதிருப்தி அலை, காங்கிரஸில் நீடிக்கும் உட்கட்சி மோதல் ஆகியவை பாஜகவுக்கு சாதகம் என கூறப்பட்டு வருகிறது. இதனால் ராஜஸ்தானில் எப்படியும் ஆட்சி தங்கள் வசமாகும் என கனவு காண்கிறது பாஜக.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலுக்கான இரு குழுக்களை பாஜக மேலிடம் இன்று அறிவித்தது. தேர்தல் நிர்வாக குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆகிய இரு குழுக்களை பாஜக மேலிடம் இன்று அறிவித்தது. 21 பேரை கொண்ட தேர்தல் நிர்வாகக் குழுவுக்கு முன்னாள் எம்பி நாராயணன் பஞ்சாரியா தலைமை வகிப்பார்; தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தலைமை வகிப்பார் என்பது பாஜக மேலிடத்தின் அறிவிப்பு.
ஆனால் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தொடங்கப்பட்ட உடனேயே பாஜகவில் புகைச்சலும் அதிருப்தியும் வெடித்துள்ளது. பாஜக மேலிடம் அறிவித்த இந்த இரு குழுக்களிலும் ராஜஸ்தான் மாநிலத்தின் பாஜக முகமான முன்னாள் மத்திய அமைச்சர் வசுந்தரராஜே சிந்தியா பெயர் இடம்பெறவில்லை. இது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், வசுந்தர ராஜே சிந்தியா இடையேயான மறைமுகமான ஒப்பந்தத்தால் அவரது ஆட்சிக் கால ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட். இதற்காக போராட்டங்களையும் கூட சச்சின் பைலட் நடத்தி இருந்தார். இது பாஜகவுக்கு சாதகமான அம்சமாக இருந்தாலும் அசோக் கெலாட்டுடன் திரைமறைவில் வசுந்தரராஜே சிந்தியா கை கோர்த்து செயல்பட்டதை பாஜக மேலிடம் ரசிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான குழுக்களில் வசுந்தரராஜே சிந்தியா ஓரம் கட்டப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களால் ஏற்க முடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications