”இனி பாஜகவில் இருந்தால் நான் குற்றவாளி” நபிகள் நாயகம் மீதான அவதூறை கண்டித்து கவுன்சிலர் ராஜினாமா
ஜெய்பூர்: நபிகள் நாயகத்தை விமர்சிக்கும் கட்சியினரை கட்டுப்படுத்த பாஜக தலைமை தவறிவிட்டதாக குற்றம்சாட்டி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கவுன்சிலர் அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்து விலகியுள்ளார்.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்கு பெயர்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.

வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதேபோல் டெல்லி, கொல்கத்தா போலீசும் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

கடும் எதிர்ப்பு
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகிய இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கான்பூர் கலவரம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த வாரம் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என காவல்துறை எச்சரித்து இருந்தது.

போராட்டம்
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நுபுர் ஷர்மா இன்னும் கைது செய்யப்படாத நிலையில், நாடு முழுவதும் அவரை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. உபியில் மட்டும் 300 பேர் உட்பட நாடு முழுவதும் 400 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அலகாபாத், சஹாரன்பூரில் போராட்டத்தில் இஸ்லாமியர்களை கைது செய்த போலீசார், அங்குள்ள வீடுகளை புல்டோசரை கொண்டு இடித்தனர்.

ராஜஸ்தான் கவுன்சிலர்
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாநகராட்சி பாஜக கவுன்சிலராக இருந்த தபசும் மிர்சா, கட்சியிலிருந்து விலகி இருக்கிறார். அவர் தனது விலகல் கடிதத்தில், "10 ஆண்டுகளுக்கு முன்பு நான் கட்சியில் சேர்ந்தேன். இப்போது இதன் உறுப்பினராக இருப்பதில் வருத்தம் அடைகிறேன். நபிகள் நாயகத்தை விமர்சிக்கும் கட்சிக்காரர்களை தடுக்க பாஜக தலைமை தவறிவிட்டது. இவ்வளவு நடந்தும் அதை ஆதரித்தால் என்னைவிட பெரிய குற்றவாளி வேறு யாரும் இருக்க முடியாது. தற்போது எனக்கு சுயநினைவு வந்து இருக்கிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications