முடிவுக்கு வந்த பஞ்சாயத்து! ராஜஸ்தானில் அமைச்சரவை விரிவாக்கம்! 17 புதுமுகங்களுக்கு இடம் கொடுத்த பாஜக
ஜெய்பூர்: ராஜஸ்தானில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்து 22 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 200 சட்டமன்ர தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் 115 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியை பிடித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 69 இடங்களில் மட்டுமே வென்று தோல்வியை தழுவியது.

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா கடந்த 15-ந்தேதி பதவியேற்றார். மேலும் துணை முதல்வர்களாக தியாகுமாரி, பிரேம்சந்த் பைர்வா ஆகியோரும் பொறுப்பேற்றுக்கொண்டனர். முதல்வர் தேர்வில் சர்ப்பிரைஸ் கொடுத்த பாஜக, அமைச்சரவையை இறுதி செய்ய கடும்பாடு பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு தெரிந்த மேலிட தலைவர்கள் மூலமாக கட்சியின் தலைமைக்கு நெருக்கடி கொடுத்தனர்.
17 பேர் புதுமுகங்கள்: இதனால் அமைச்சரவையில் யாருக்கு இடம் ஒதுக்குவது என முடிவு செய்ய கடந்த சில வாரங்களாகவே பாஜக தீவிர ஆலோசனை மேற்கொண்டது. இந்த நிலையில், தான் ராஜஸ்தானில் கிட்டதட்ட ஒரு மாதம் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. நேற்று ராஜஸ்தானில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் பாஜக மூத்த தலைவர் கிரோடிலால் மீனா ஆகியோர் உள்பட 22 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். 17 பேர் புதுமுகங்கள் ஆகும். அமைச்சர் பதவியேற்பு விழா நேற்று அம்மாநில கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நாட்டிலேயே முதல்முறை: ராஜஸ்தானில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு வேட்பாளராக நியமிக்கப்பட்ட குர்மீத் சிங் கூன்னார் மரணம் காரணமாக கரன்பூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக சுரேந்திர பால் சிங் நிறுத்தப்பட்டுள்ளார். இவரும் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.
இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியிருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சி கூறுகையில், "வேட்பாளராக இருப்பவர் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டது பற்றி தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். தேர்தலுக்கு முன்பு பாஜக தனது வேட்பாளரை அமைச்சராக ஆக்கியது நாட்டிலேயே இதுவே முதல்முறை" என்றார்.












Click it and Unblock the Notifications