ராகுல் பாதயாத்திரை போறெதல்லாம் வேஸ்ட்டா கோபால்? ராஜஸ்தானில் மீண்டும் கெலாட் VS பைலட் சண்டை!
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் மூத்த தலைவர் சச்சின் பைலட் இடையே மீண்டும் உக்கிரமானது உட்கட்சி மோதல்.
ராஜஸ்தான் மாநில முதல்வராக உள்ளார் அசோக் கெலாட். இவரது அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்தார் சச்சின் பைலட். இருவருக்கும் இடையேயான மோதலால் சச்சின் பைலட் பதவியை தூக்கி எறிந்தார்.
ஒரு வேளை அதுவா இருக்குமோ? மோடி - கெலாட் புகழ்ச்சி.. பறந்து வந்த பைலட்! ராஜஸ்தான் காங்கிரஸில் புயல்
சச்சின் பைலட் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் அசோக் கெலாட்டுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினார். ஆனால் டெல்லி மேலிடம் தலையிட்டு சமாதானப்படுத்தியது.
காங்கிரஸ் கட்சிக்கான அகில இந்திய தலைவர் தேர்தலின் போது இந்த பிரச்சனை மீண்டும் வெடித்தது. காங்கிரஸ் மேலிட ஆதரவுடன் அசோக் கெலாட், கட்சித் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிட இருந்தார். அப்படி கெலாட், காங்கிரஸ் தலைவரானால் சச்சின் பைலட் முதல்வராகலாம் என கூறப்பட்டது. ஆனால் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேறுவழியே இல்லாமல் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கெலாட் விலகிக் கொண்டார்.
இதன்பின்னர் பிரதமர் மோடியை கெலாட் புகழ்வதும், கெலாட்டுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டுவதும் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. தற்போது மீண்டும் கெலாட், பைலட் இடையேயான மோதல் உக்கிரமடைந்துள்ளது. டிவி பேட்டி ஒன்றில் அசோக் கெலாட், என்னுடைய அரசுக்கு எதிராக எம்.எல்.ஏக்களுடன் பைலட் போர்க்கொடி தூக்கினார். அதில் அமித்ஷாவின் பங்கு முக்கியமானது. பைலட் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு ரூ10 கோடி கொடுத்தார். இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவ பைலட். அந்த துரோகியை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்றார்.
இதற்கு பதிலடி தந்துள்ளார் சச்சின் பைலட். மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியுடன் பாதயாத்திரையில் பங்கேற்றுள்ளார் பைலட். அசோக் கெலாட் விமர்சனத்துக்கு பதில் கொடுத்துள்ள பைலட், மூத்த தலைவரான கெலாட் இப்படி பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை. பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்து நின்று போராட வேண்டிய தருணம். அசோக் கெலாட் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை நீண்டகாலமாக கூறி வருகிறார் என்றார்.