என்ன ஒரு முதலமைச்சர்யா.. போன வருஷ பட்ஜெட் உரையை இப்போது வாசித்த அசோக் கெலாட்.. பெரும் அமளி
ராஜஸ்தானில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் அசோக் கெலாட் கடந்த நிதியாண்டில் தாக்கல் செய்த பட்ஜெட்டை வாசித்ததால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
ஜெய்பூர்: ராஜஸ்தானில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த மாநில முதல்வர் அசோக் கெலாட் கடந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்ற உரையை வாசித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.
தேர்தல் நடைபெற உள்ளதால் பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகர திட்டங்களும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. நாட்டில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பெரிய மாநிலம் ராஜஸ்தான் மட்டுமே.

இன்று பட்ஜெட் தாக்கல்
இதன் காரணமாகவே இங்கு ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சி காய் நகர்த்தி வருகிறது. அதேபோல், எதிர்க்கட்சியான பாஜகவும் ஆட்சியை மீண்டும் பிடிப்பதில் தீவிரமாக உள்ளது. இத்தகைய பரபரப்புமிக்க அரசியல் சூழலில் ராஜஸ்தானில் சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யபட்டது. நிதித்துறை பொறுப்பும் முதல்வர் அசோக் கெலாட்டிடமே உள்ளதால் பட்ஜெட்டை அவரே தாக்கல் செய்தார்.

மன்னிப்பு கேட்ட அசோக் கெலாட்
அசோக் கெலாட் பட்ஜெட் தாக்கல் செய்து உரையை சில நிமிடங்கள் வாசித்துக்கொண்டு இருந்தார். அப்போதுதான் அமைச்சர் மகேஷ் ஜோஷி, கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை முதல்வர் அசோக் கெலாட் படிப்பதை கவனித்தார். உடனடியாக அசோக் கெலாட்டிடம் இதைக்கூறினார். உடனே சுதாரித்துக்கொண்ட அசோக் கெலாட் பட்ஜெட் உரை வாசித்ததை நிறுத்தினார். உடனடியாக தவறுதலாக வாசித்ததற்காக அசோக் கெலாட் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் அமளி
எனினும் பாஜக எம்.எல்.எக்கள் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்த பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. சபாநாயர் உறுப்பினர்களை அமைதி காக்குமாறு வலியுறுத்தினார். ஆனாலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான வசுந்தரா ராஜே அசோக் கெலாட்டை கடுமையாக சாடி பேசினார்.

நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்
வசுந்தரா ராஜே பேசுகையில், "நான் முதல்வராக இருந்த போது பட்ஜெட் வாசிப்பதற்கு முன்பாக முழுமையாக சரிபார்த்துக்கொள்வேன். கடந்த பட்ஜெட்டை மீண்டும் வாசிக்கும் முதல்வரின் கையில் மாநிலம் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்றார். இதற்கு பதிலளித்த அசோக் கெலாட், உங்கள் கையில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்ஜெட்டின் நகலில் இருந்து என்னிடம் இருக்கும் பட்ஜெட் உரையில் வேறுபாடு இருந்தால் என்னிடம் சுட்டிக்காட்டுங்கள். பட்ஜெட் உரை கசிந்து விட்டதாக எப்படி சொல்ல முடியும். தவறுதலாக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இருந்த பக்கங்கள் சேர்க்கப்பட்டு விட்டது" என்றார். எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் சட்டப்பேரவை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications