ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்கும் பாஜக.. காங்கிரஸ்க்கு பின்னடைவு.. ஜன் கி பாத் கணிப்பு முடிவுகள்
டெல்லி : ராஜஸ்தான் மாநிலத்தில் ஜன் கி பாத் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 111 இடங்களையும் காங்கிரஸ் 74 இடங்களையும் , மற்ற கட்சிகள் 14 இடங்களையும் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் நேரடி போட்டி நிலவி வருகிறது. அங்கு இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்நிலையில் தற்போது அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த நவ. 25ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக 199 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்தததால் ஒத்திவைக்கப்பட்டது. சுமார் 75% வாக்குகள் பதிவானது. ராஜஸ்தான் மாநிலத்தில் இவ்வளவு அதிகமான வாக்குகள் பதிவானது பலருக்கும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தி இருந்தது. பொதுவாக ஐந்து வருடங்கள் ஆண்ட கட்சி அடுத்த முறை மாறிவிடும். இதுதான் எதார்த்தமான ஒன்றாக ராஜஸ்தானில் காலம் காலமாக இருக்கிறது. இந்நிலையில் அதிகப்படியான வாக்கு சதவீதம் பதிவானதால் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என்றே கூறப்பட்டது
ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரைக் கடந்த காலங்களில் முந்தைய தேர்தலைக் காட்டிலும் குறைந்த வாக்குகள் பதிவான 7 தேர்தல்களில் ஆளும் தரப்பு மூன்று முறை ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. அதேநேரம் முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிக வாக்குகள் பதிவான 7 தேர்தல்களில் ஒரே ஒரு முறை மட்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டன. ஆனால், இவை அனைத்தும் 1990களில் நடந்தவை. அதன் பிறகு எந்தவொரு கட்சியாலும் அங்கே ஆட்சியைத் தக்க வைக்க முடியவில்லை. மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.
இந்நிலையில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் இன்று நடந்து முடிந்த நிலையில் ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்புகளை பிரபல செய்தி ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜன் கி பாத் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 111 இடங்களையும் காங்கிரஸ் 74 இடங்களையும் , மற்ற கட்சிகள் 14 இடங்களையும் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications