ராஜஸ்தானில் கம்பேக் கொடுக்கும் பாஜக.. காங்கிரஸ்-க்கு கடும் பின்னடைவு.. வெளியான பரபர கருத்து கணிப்பு
ஜெய்பூர்: காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் இந்த முறை அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்று ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தானில் கடந்த 1993 ஆண்டுக்கு பிறகு இதுவரை ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்ததாக வரலாறு இல்லை. எனவே வரும் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கும் மேல் வென்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த முறை ஆளும் கட்சி மீதான அதிருப்தி அலையை பயன்படுத்தி காங்கிரசை வீழ்த்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது. அதேவேளையில், கடந்த கால வரலாறுகளை மாற்றி ஆட்சியை தக்க வைப்பதில் காங்கிரசும் பல்வேறு வியூகம் வகுத்து வருகிறது.
ராஜஸ்தானில் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 25 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் வரும் 6 ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் நெருங்கி வந்து விட்ட நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளன.
அந்த வகையில், இன்று ஏபிபி சி வோட்டர் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளும் அதையே கூறியுள்ளன. அதன்படி ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 114 முதல் 124 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் 67 - 77 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மொத்த தொகுதிகள்: 200
பாஜக: 114 - 124 வரை வெற்றி பெற வாய்ப்பு (வாக்கு சதவிகிதம் 44.8)
காங்கிரஸ்: 67 - 77 தொகுதிகள் வரை வெற்றிக்கு வாய்ப்பு (41.7%).












Click it and Unblock the Notifications