ராஜஸ்தானில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது காங்கிரஸ்! ஆட்சியை பறி கொடுத்தது பாஜக
Recommended Video
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக நடுவே கடும் போட்டி நிலவிய நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பிடிக்க கடும் போராட்டம் நடத்தி வருகிறது காங்கிரஸ்.
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 சட்டசபை தொகுதிகளில், 199 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆல்வார் மாவட்டத்திலுள்ள ராம்கார் தொகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மாரடைப்பால் மரணமடைந்ததையடுத்து, அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
இம்மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 தொகுதிகளில் வெல்வது அவசியம். பெரும்பாலான எக்சிட் போல் கருத்துக் கணிப்புகள் ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான, பாஜக ஆட்சியால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது, காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்று கூறின.
இந்த நிலையில், தபால் வாக்குகள் எண்ணப்பட துவங்கியது முதலே, ராஜஸ்தானில், காங்கிரஸ் மற்றும் பாஜக நடுவே கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளும் சம அளவில் முன்னிலை பெற்றன. ஆனால், சிறிது நேரம் கழித்து காங்கிரஸ் முன்னிலை பெறத் தொடங்கியது.
இதன்பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணத்தொடங்கப்பட்டதும், காங்கிரஸ் கட்சி பெரும் முன்னிலை நோக்கி சென்றது. இதனால் எளிதாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என நம்பப்பட்டது. ஆனால் காலை 11.30 மணியளவிலான நிலவரப்படி, 100 தொகுதிகளில் காங்கிரசும், 74 தொகுதிகளில் பாஜகவும் முன்னிலை பெற்றிருந்தன. பாஜக 50க்கும் குறைவான இடங்களில் வெல்லும் என்று பல எக்சிட் போல் முடிவுகள் கூறிய நிலையில், அக்கட்சி அதைவிட அதிக தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால், இழுபறி நிலை நீடித்தது.
பிற்பகல் 2 மணியளவில் காங்கிரஸ் 104 தொகுதிகளிலும், பாஜக 67 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தன. இரவு 8 மணிக்கு, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புப்படி, காங்கிரஸ் கட்சி 71 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 28 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. ஆக மொத்தம் 99 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது.
பாஜக 60 தொகுதிகளில் வெற்றி பெற்று, 13 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. 73 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்று 1 தொகுதியில் முன்னிலையில் இருந்தது. எனவே, காங்கிரசுடன் இணைந்து பகுஜன் சமாஜ் ஆட்சியை பிடிக்கப்போகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.