"பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை" கொண்டு வந்தது பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தான் அரசு!!

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: இடஒதுக்கீட்டை ஒழிக்கும் வகையில் முதல் கட்டமாக பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பாரதிய ஜனதா ஆளும் ராஜஸ்தான் மாநில அரசு கொண்டுவந்துள்ளது. "பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர்" என்ற புதிய பிரிவை உருவாக்கி முற்பட்ட வகுப்பினரும் ஆதாயம் அடையும் வகையில் 14% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை ராஜஸ்தான் மாநில அரசு நிறைவேற்றியுள்ளது.

Rajasthan govt clears reservation for Gujjars and poor among upper castes

குஜராத்தில் "எங்களுக்கு இடஒதுக்கீட்டு கொடு; இல்லையேல் இடஒதுக்கீட்டை ஒழி" என்று படேல் சமூகத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் இடஒதுக்கீடு குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்துத்துவா அமைப்புகள் அனைத்தும் ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும்; முதல் கட்டமாக பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; பின்னர் படிப்படியாக இடஒதுக்கீட்டு முறையை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத், இடஒதுக்கீட்டு முறையை மாற்றிய அமைக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் பீகார் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை கருத்தில் கொண்டு மத்திய அரசு அப்படியெல்லாம் இடஒதுக்கீட்டை மாற்றிவிட முடியாது என்று கூறியிருந்தது.

இந்த நிலையில் இந்துத்துவா அமைப்புகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவதற்காக முதல் கட்டமாக பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பாரதிய ஜனதா கட்சி ஆளும் ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது.

அம்மாநில சட்டசபையில் இடஒதுக்கீடு தொடர்பான 2 மசோதாக்கள் நேற்று தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டுள்ளன.

1) "பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்" என்ற புதிய பிரிவினருக்கு 14% இடஒதுக்கீடு அளிக்கப்படும்.

"பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்" என்ற இப் புதிய பிரிவானது

ஜாதிய அடிப்படையிலானது அல்ல;

முற்றிலும் பொருளாதார அடிப்படையிலானது;

இந்தப் பிரிவில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் கூட இடம்பெறலாம். இதைத்தான் இந்துத்துவா அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

2) சிறப்பு பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற அடிப்படையில் குஜ்ஜார்கள் உட்பட 5 சமூகத்துக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கப்படும்.

ஆகிய இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

"பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்" என்பதுதான் இந்துத்துவா அமைப்புகள் காலம் காலமாக வலியுறுத்தி வரும் பொருளாதார அடிப்படையிலான -கிரீமிலேயர் இடஒதுக்கீடு முறை.

தமிழகத்தில் 1980ஆம் ஆண்டே கிரீமிலேயர் இடஒதுக்கீட்டை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். கொண்டுவந்து பார்த்தார். அதற்கு பரிசாக அப்போதைய லோக்சபா தேர்தலில் மண்ணைக் கவ்வியது அ.தி.மு.க. அதன் பின்னர் கிரீமிலேயர் முறையை எம்.ஜி.ஆர். ஒழித்தார் என்பது வரலாறு.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்திய மாநிலங்களில் பொதுவாக 50% இடஒதுக்கீடுதான் கடைபிடிக்க வேண்டும். அதே நேரத்தில் தமிழகம் 69% இடஒதுக்கீட்டை நிறைவேற்றி அரசியல் சாசனப் பாதுகாப்பை பெற்றுள்ளதால் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தமிழகத்தைக் கட்டுப்படுத்தாது. இது ஆந்திரா, ஒடிஷா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் பொருந்தும்.

இந்த அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை 49 இடஒதுக்கீடுதான் கடைபிடிக்கப்பட்டு வந்தது. தற்போதைய புதிய சட்டங்களால் 68% இடஒதுக்கீடு இனி நடைமுறையில் இருக்கும்.

அத்துடன் இந்த 68% இடஒதுக்கீட்டுக்கு மாநில அரசு, உரிய அரசியல் சட்டப் பாதுகாப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராஜஸ்தான் மாநில சட்டசபை கேட்டுக் கொண்டுள்ளது. இப்புதிய இடஒதுக்கீடுக்கு எதிராக ஒருசிலர் உயர்நீதிமன்றத்துக்குப் போகவும் வாய்ப்பிருக்கிறது.

மேலும் பொருளாதார அடிப்படையிலான இப்புதிய இடஒதுக்கீடு "ஒரு நல்ல முன்னுதாரணம்" எனக் கூறிக் கொண்டு பாரதிய ஜனதா ஆளும் இதர மாநிலங்களும் இத்தகைய ஒரு சட்டத்தைக் கொண்டுவரவும் வாய்ப்பிருக்கிறது.

இதன் மூலமாக ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீடு என்ற இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் அடிப்படை உரிமைக்கு பேராபத்து நெருங்கி உள்ளதாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+