ராஜஸ்தான் நகரசபை தேர்தல்.. காங்கிரஸ் அபார வெற்றி.. பாஜகவுக்கு பின்னடைவு
ஜெய்ப்பூர்: சமீபத்தில் முடிவடைந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் தோற்ற போதிலும், நகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் அதிக இடங்களில் வென்றுள்ளது. காங்கிரசுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக முடிவுகள் அமைந்துள்ளது. மொத்தம் உள்ள 50 நகரங்களில் 36 நகராட்சிகளை காங்கிரஸ் வென்றுள்ளது. பாஜக 12 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
நகராட்சி தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. பாரதீய ஜனதா கட்சி 12 நகராட்சிகளில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் 36 இடங்களில் வென்று அசத்தி உள்ளது. சுயேச்சைகள் இரண்டு இடங்களில் வென்றுள்ளனர்.
ஜெய்ப்பூர் மாவட்டத்தில், தேர்தல்கள் நடந்த 10 நகராட்சிகளில் ஒன்பது இடங்களை காங்கிரஸ் கட்சி வென்று சாதனை படைத்துள்ளது, பக்ரு என்ற ஒரு நகராட்சியை சுயேட்சை வென்றுள்ளார். ஜெய்ப்பூர் மாவட்டத்தில் சக்ஸு, சோமு, ஜாப்னர், கிஷன்கர் ரென்வால், கொட்டுபுட்லி, புலேரா, சம்பர் ஏரி, ஷாஹ்புரா மற்றும் விராட்நகர் ஆகிய 10 நகராட்சிகளை காங்கிரஸ் வென்றுள்ளது.
கங்காநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 நகராட்சிகளில், காங்கிரஸ் 4 நகராட்சிகளையும் பாஜக நான்கு நகராட்சிகளையும் வென்றன. ஆல்வாரில் மொத்தம் உள்ள பாஜக நான்கு நகராட்சி அமைப்புகளையும், காங்கிரஸ் இரண்டையும் வென்றன, பரன் மாவட்டத்தில் 2 நகராட்சியையும் காங்கிரஸ் வென்றது. ஜோத்பூரில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலா ஒரு நகராட்சிகளை கைப்பற்றினர். கோட்டா மாவட்டத்தில் , காங்கிரசும் பாஜகவும் தலா ஒரு நகராட்சியை வென்றன.
வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் டோட்டாசரா தனது ட்விட்டர் பதிவில்: "இன்று, ராஜஸ்தானின் 50 நகராட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்கள் முடிந்தது. இதில், காங்கிரஸ் கட்சி 36 இடங்களில் வென்றுள்ளது. பாஜக 12ல் மட்டுமே வென்றது. வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு, தொண்டர்களுக்கு நன்றி" எனறு கூறியுள்ளார்.
முன்னதாக, ராஜஸ்தானில் 12 மாவட்டங்களில் 1,775 வார்டுகளில் நடந்த உள்ட்தேர்தலில் 619 ஐ காங்கிரஸ் வென்றது, சுயேச்சைகள் 595 வார்டுகளையும், பாஜக 549 வார்டுகளையும் வென்றது..