‛சொன்னதை செய்தே தீருவேன்’’.. ராஜஸ்தான் பாஜக அமைச்சர் திடீர் ராஜினாமா! இப்படியும் ஒரு அரசியல்வாதியா?
ஜெய்ப்பூர்: எனக்கு சொன்ன வார்த்தை தான் முக்கியம் எனக்கூறி ராஜஸ்தானில் பாஜகவை சேர்ந்த கிரோடி லால் மீனா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பஜன் லால் சர்மா உள்ளார். இவரது அமைச்சரவையில் பாஜகவின் மூத்த தலைவரான கிரோடி லால் மீனா அமைச்சாராக செயல்பட்டு வந்தார். இவர் விவசாயம், தோட்டக்கலை, கிராமப்புற மேம்பாடு, பேரிடம் மேலாண்மை மற்றும் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை நிர்வகித்து வந்தார்.

இந்நிலையில் தான் சமீபத்தில் லோக்சபா தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின்போது கிரோடி லால் மீனா மொத்தம் 7 தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின்போது அவர் பேசுகையில், ‛‛நான் பிரசாரம் செய்த 7 தொகுதிகளிலும் பாஜக நிச்சயம் வெல்லும். இதில் ஒரு தொகுதியில் பாஜக தோல்வியடைந்தாலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்'' என உறுதியாக கூறினார்.
இந்நிலையில் தான் கடந்த மாதம் 4ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானது. அப்போது கிரோடி லால் மீனாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அவர் பிரசாரம் செய்த தொகுதிகளில் 3ல் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. கிரோடி லால் மீனாவின் சொந்த தொகுதியான தவ்சா உள்பட 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.
இதையடுத்து கிரோடி லால் மீனா மிகவும் மனவருத்தம் அடைந்தார். அதோடு அவர் தனது துறை சார்ந்த அலுவலகங்களுக்கு செல்லாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் தான் 4 தொகுதிகளில் ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றும், தனக்கு சொன்ன வார்த்தை தான் முக்கியம் என்றும் கிரோடி லால் மீனா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கான கடிதத்தை அவர் ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மாவிடம் வழங்கி உள்ளார். இதுபற்றி கிரோடி லால் மீனாவின் உதவியாளர் கூறுகையில், ‛‛கிரோடி லால் மீனா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் 10 நாட்களுக்கு முன்பே முதல்வர் பஜன் லால் சர்மாவிடம் வழங்கினார்'' என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வரை அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதா? அல்லது நிராகரிக்கபப்ட்டுள்ளதா? என்பது பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications