ராஜஸ்தானையும் விட்டுவைக்காத ‘பைபர்ஜாய்’ புயல்.. 2வது மாடியில் இருந்து விழுந்த கண்ணாடி.. கார் க்ளோஸ்!
ஜெய்சால்மர்: குஜராத்தில் பைபர்ஜாய் புயல் கரையைக் கடந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தை நோக்கி நகர்ந்தது. பைபர்ஜாய் புயலின் தாக்கத்தால் ராஜஸ்தானின் சில பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. கனமழையால் வடமேற்கு ரயில்வே மண்டலத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
10 நாட்களுக்கும் மேலாக அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த பைபர்ஜாய் புயல் நேற்றுமுன் தினம் மாலை 4.30 மணியளவில் குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையை கடக்கத் தொடங்கியது.

பைபர்ஜாய் புயலின் கண் சுமார் 50 கி.மீ விட்டம் கொண்டது. இதனால் புயலின் கண் பகுதி கரையை கடக்க நள்ளிரவானது. புயலின் கண் பகுதி கரையை நெருங்க நெருங்க மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. அசுர வேகத்தில் வீசிய காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் அடுத்தடுத்து வேருடன் சாய்ந்தன.
கட்ச், தேவ்பூமி துவாரகா மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தன. மேலும் சுமார் 6 ஆயிரம் மின்கம்பங்களும் சரிந்தன. இதேபோல வீடுகளின் தகர ஷீட் கூரைகள் காற்றில் பறந்தன. குடிசை வீடுகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மரங்கள், மிம் கம்பங்கள் விழுந்ததில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
பைபர்ஜாய் புயல் கரையை கடந்த பின்னரும், வலுவிலக்காமல் ராஜஸ்தானை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக தெற்கு ராஜஸ்தான் பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் உடனடியாக எச்சரிக்கை விடுத்தது. பைபர்ஜாய் புயல் ராஜஸ்தான் மாநிலத்தை நோக்கி நகர்ந்ததால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
பைபர்ஜாய் புயல் காரணமாக ராஜஸ்தானின் ஜலோர், பார்மர், ஜெய்சால்மர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 200 மி.மீ வரை மழை பதிவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜெய்சால்மர், பார்மர், ஜலோர் மற்றும் ஜோத்பூர் ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும், உதய்பூர், அஜ்மீர் ஆகிய பகுதிகளிலும் இன்றும் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் வடமேற்கு ரயில்வே மண்டலத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களை ராஜஸ்தான் அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

உதய்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பைபர்ஜாய் சூறாவளி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உதய்பூரில் ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கண்ணாடி பெயர்ந்து விழுந்ததில், ஒரு கார் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது கீழே யாரும் இல்லாததால் மனித சேதம் தவிர்க்கப்பட்டது.
பைபர்ஜாய் சூறாவளி புயல் நேற்று இரவு 11.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது, தென்கிழக்கு பாகிஸ்தானை ஒட்டிய தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் கட்ச் மற்றும் தோலாவிராவிலிருந்து வடகிழக்கே 100 கி.மீ. அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications