மோடி பதவியேற்பு விழா- ரஜினி, அமிதாப் பச்சன், சல்மான் கானுக்கு அழைப்பு
டெல்லி: மோடி பிரதமராகப் பதவியேற்கவுள்ள நிகழ்ச்சிக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை மட்டுமல்லாமல் சினிமாக்காரர்களையும் கூட அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், சல்மான் கான், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு போயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதில் தேர்தலுக்கு முன்பு மோடி சென்னை வந்து நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்துப் பேசினார். அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதேபோல நடிகர் விஜய், அவராகவே கோவைக்குப் போய் மோடியைச் சந்தித்துப் போட்டோ எடுத்துக் கொண்டு வந்தார்.
அமிதாப் பச்சன் ஏற்கனவே மோடியைப் பாராட்டி பேசி வருபவர். சல்மான் கானும் மோடியுடன் நல்ல நட்பில் இருப்பவர்தான். விவேக் ஓபராயும் அப்படியே.
இந்த நிலையில் இவர்கள் அனைவரையும் மோடி, பதவியேற்பு விழாவுக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அமிதாப் பச்சன் மோடியின் குஜராத் அரசின் சுற்றுலாத்துறையின் பிராண்ட் அம்பாசடராக இருந்தவர். ரஜினியை, மோடிக்கு வாய்ஸ் கொடுப்பதற்காக பாஜக கடுமையாக முயன்றது. இருப்பினும் ரஜினி வாய்ஸ் தரவில்லை. அதேசமயம், ரஜினியைத் தேடி மோடி வந்து சந்தித்தபோது மோடி நினைப்பது நடக்கும் என்று மறைமுகமாக வாய்ஸ் கொடுத்திருந்தார்.
இவர்கள் அனைவரும் மோடி பதவியேற்பு விழாவுக்கு வருவார்களா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.