ஆந்திரத் தலைநகர் அடிக்கல் நாட்டு விழாவுக்கு சொந்தக் காசில் சொகுசு பஸ்களை அனுப்பிய ரஜினி!
ஹைதராபாத்: ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி நகரத்தின் அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்கும் மிக முக்கிய பிரமுகர்களை அழைத்துச் செல்ல 2 சொகுசுப் பேருந்துகளை நடிகர் ரஜினிகாந்த் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக உருவெடுக்கும் அமராவதி நகருக்கான அடிக்கல் நாட்டு விழா, குண்டூர் அருகே இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார்.
பொதுமக்கள் மற்றும் தெலுங்கு தேசத் தொண்டர்கள் கலந்து கொள்ள வசதியாக ஆந்திரா மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. தலைநகர் அமையும் இடத்தில் இருந்து தொலைவில் இருக்கும் மாவட்டங்களான அனந்தபுரம், ஸ்ரீகாகுளம், விஜய நகரம், விசாகப்பட்டினம், கடப்பா ஆகியவற்றில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆந்திர அரசு சார்பில் மட்டும் 5500 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இலவச பேருந்துகள்
இது தவிர தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தொண்டர்களை அழைத்து வர 5038 பேருந்துகளும், 3 ஆயிரம் சிறிய மற்றும் பெரிய கார்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மேலும் அமராவதிக்கு அருகில் உள்ள குண்டூர், கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து மட்டும் 4 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன.

லட்சக்கணக்கான தொண்டர்கள்
விழாவில் பங்கேற்க நான்கரை லட்சம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில் இரண்டரை லட்சம் பேர் விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. குண்டூர், கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து மட்டும் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் விழா நடந்த இடம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

சுவையான உணவுகள்
அமராவதி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், புளி சாதம், தயிர் சாதம், ஒரு இனிப்பு, வாழைப்பழம், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. முக்கிய பிரமுகர்களக்கு தனி உணவு பரிமாறப்பட்டது.

சொகுசு வாகனங்கள்
விஜயவாடா கன்னசரம் விமான நிலையத்தில் இருந்து விழா மேடைக்கு வி.ஐ.பி.க்களை அழைத்து வர தொழில் அதிபர்கள், பேருந்து அதிபர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்களது சொந்த வாகனங்களை அரசுக்கு இலவசமாக வழங்கினார்கள்.

ரஜினிகாந்த் பேருந்துகள்
இதில் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் 2 சொகுசு பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பேருந்துகள் அனைத்து வசதிகளும் கொண்டவை என்று ஆந்திரா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நட்புக்கு மரியாதை
நடிகர் ரஜினிகாந்தும், ஆந்திராமாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் நீண்டகால நண்பர்கள். அந்த நட்புக்கு மரியாதை செய்யும் விதமாக சொகுசு பேருந்துகளை தனது சொந்த செலவில் அமராவதிக்கு அனுப்பி வைத்துள்ளார் ரஜினிகாந்த் என்கின்றனர் ஆந்திராமாநில மக்கள்.












Click it and Unblock the Notifications