வினாச காலே விபரீத புத்தி.. காலா படப்பிடிப்பில் நண்பர்களிடம் ரஜினி சாடியது யாரை?
தம் மீதான கடும் விமர்சனங்களுக்கு ரஜினி அளித்திருக்கும் பதில்: வினாச காலே விபரீத புத்தி என்பதுதான்.
மும்பை: தமக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்பாக காலா படப்பிடிப்பில் நண்பர்களிடம் விவாதித்த ரஜினிகாந்த், 'வினாச காலே விபரீத புத்தி' என சாடியிருக்கிறார். ரஜினி சாடியது யாரை என்பது தொடர்பாக பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்; பாஜகவில் இணைவார் என பேராவலுடன் காத்திருந்தது பாஜக. ஆனால் அவரோ தனிக்கட்சி தொடங்குவதில் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார்.
இது தொடர்பாக தீவிரமான ஆலோசனைகளையும் நடத்தி வருகிறார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த பாஜக சுப்பிரமணியன் சுவாமி போன்றோர் மூலம் ரஜினியை விமர்சித்து வருகிறது.
ரஜினிக்கு தகுதி இல்லை
சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்தை 420; படிக்காதவர்; அரசியலுக்கு தகுதி இல்லாதவர் என கடுமையாக விமர்சித்தார். ஆனால் தமிழக பாஜக தலைவர்களோ ரஜினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒருமையில் திட்டிய சுவாமி
இதனிடையே சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ரஜினிகாந்தை அவன் அரசியலுக்கு வரமாட்டான் என ஒருமையில் பேசினார். இது ரஜினி ரசிகர்களை கடுமையாக கொந்தளிக்க வைத்தது.
பேட்டியை பார்த்த ரஜினி
சுப்பிரமணியன் சுவாமி பேட்டியின் வீடியோ மும்பை காலா படப்பிடிப்பில் உள்ள இயக்குநர் ரஞ்சித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ரஜினிகாந்திடம் சுப்பிரமணியன் சுவாமி தம்மை ஒருமையில் திட்டும் வீடியோவை போட்டு காட்டியிருக்கிறார்.
ரஜினி கடும் கோபம்
இந்த விமர்சனத்தால் கடும் கோபமடைந்த ரஜினிகாந்த் படப்பிடிப்பில் ரஞ்சித் உள்ளிட்டோருடன் விவாதித்திருக்கிறார். அப்போது கடும் கோபத்தில் 'வினாச காலே விபரீத புத்தி' என ஸ்லோகத்தை சொல்லி சாடியிருக்கிறார் (அழிவுகாலம் தொடங்கிவிட்டதால் புத்தி கெட்டதைத்தான் பேசும், விபரீதமாகத்தான் யோசிக்கும் என்பது இந்த ஸ்லோகத்தின் அர்த்தம்).
திட்டியது யாரையாம்?
இத்தகவல் ரஜினி ஆதரவு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கிடைத்தது. ரஜினிகாந்த் வினாச காலே விபரீத புத்தி என திட்டியது சுப்பிரமணியன் சுவாமியையா அல்லது அவரைத் தூண்டிவிட்ட பாஜகவையா? என்பதுதான் இப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.