ராஜிவ் கொலை வழக்கு- பேரறிவாளன் மனு மீது டிசம்பர் 10ல் தீர்ப்பு

ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சென்னை தடா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், ஜெயின் கமிஷன் விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து ராஜிவ் கொலை சம்பவம் தொடர்பான சதித் திட்டத்தில் ஈடுபட்டு, இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்படாத அத்தனை நபர்கள் குறித்தும் விசாரிப்பதற்காக பல்நோக்கு விசாரணை ஒழுங்கு முகமை அமைக்கப்பட்டது.
சி.பி.ஐ. அமைப்பின் கீழ் செயல்படும் இந்த முகமை தனது புலன் விசாரணையை சரிவர நடத்தவில்லை. இதனால் இந்த கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.
புலன் விசாரணை முறையாக நடத்தப்பட்டால் ராஜிவ் கொலைக்கு காரணமான உண்மையான சதிகாரர்கள் கண்டறியப்படுவார்கள். ஆகவே, சதித் திட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து முறையாக புலன் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிடுவதோடு, அந்த புலன் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் பேரறிவாளன்.
இம் மனு சென்னையில் உள்ள தடா வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி என்.தண்டபாணி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர்கள், சி.பி.ஐ. அதிகாரிகளைத் தவிர மற்றவர்கள் நீதிமன்றத்தின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் தடா என்.சந்திரசேகரன், இந்த வழக்கில் டிசம்பர் 10-ந் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications