அத்வானி, சுஷ்மா ஸ்வராஜை என்ன செய்யலாம்...: மோடியை சந்தித்து பேசும் பாஜக தலைவர்கள்
டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானி சபாநாயகராக விரும்புகிறார். ஆனால் பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி வேறு திட்டம் வைத்துள்ளார்.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் அருண் ஜேட்லி, நிதின் கத்காரி ஆகியோர் இன்று குஜராத் சென்று காந்திநகரில் தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளரான மோடியை சந்தித்து பேசவிருக்கிறார்கள். இதற்கு முன்பு ராஜ்நாத் சிங் பாஜக மூத்த தலைவரான அத்வானியை சந்திக்கிறார்.

முன்னதாக நிதின் கட்காரி ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து எதிர்கால யுத்திகள் பற்றி பேசினார். இன்று மோடியை சந்தித்து பேசும்போது கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்கு என்ன பொறுப்பு அளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கவிருக்கிறார்கள்.
கடந்த இரண்டு நாட்களாகவே பாஜக முக்கிய தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ராஜ்நாத் சிங் பாஜக மூத்த தலைரான சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேச, மோடி ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் என்று பல தலைவர்களை சந்தித்து பேசினார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அத்வானியை தலைமை தாங்க வைக்க மோடி விரும்புகிறார் என்றும் ஆனால், அத்வானி சபாநாயகர் பதவியை பெற விரும்புகிறார் என்றும் கூறப்படுகிறது.
மோடி பிரதமர் ஆனால் குஜராத் முதல்வர் பதவி காலியாகிவிடும். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு முதல்வர் பதவிக்கு ஏற்ற நபர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications