வன்முறை வேண்டாம்... பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்- மாவோயிஸ்டுகளுக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு
பிலாஸ்பூர்: மாவோயிஸ்டுகள் வன்முறையை கைவிட்டால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என உள்துறை அமச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்ததையொட்டி சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். வன்முறையைக் கைவிட்டால் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

வன்முறை நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. இந்திய மக்கள் வன்முறையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏழைகள் மற்றும் பொதுமக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் அப்பாவி மக்களைக் கொல்ல மாட்டார்கள். வன்முறையை தவிர்த்து வேறு சித்தாந்தத்தை மாவோயிஸ்டுகள் பின்பற்றலாம். ஆனால், அது அப்பாவி மக்களைக் கொல்லும் செயலாக இருக்கக் கூடாது.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் தீவிரவாதிகளின் ஊடுருவல் 50% குறைந்துள்ளது. முன்னதாக, எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இந்தியாவினுள் ஊடுருவி வந்தனர். தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் தீவிரவாதிகள் ஊடுருவுதலுக்கு சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications