அயோத்தி கோவிலில் அதிசயம்.. ராமர் சிலை நெற்றியில் விழுந்த சூரிய ஒளி.. ராம நவமியில் பக்தர்கள் பரவசம்
அயோத்தி: கடவுள் ராமர் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ராமநவமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ராமநவமி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று மதியம் சரியாக 12 மணியளவில் அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள குழந்தை ராமர் சிலையின் நெற்றியில் சூரியஒளி விழுந்தது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். ராமர் கோவில் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழுந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
நீண்ட சட்ட போராட்டத்துக்கு பிறகு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அதன்பிறகு பக்தர்கள் ராமர் கோவிலில் தினமும் தரிசனம் செய்து வருகின்றனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தி தான் ராமர் பிறந்த இடம். இதனால் இந்த கோவில் மிகவும் பிரசித்திப்பெற்று விளங்கி வருகிறது. தினமும் பல ஆயிரம் மக்கள் ராமர் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை உள்ளது. அதாவது ராமரின் 5 வயது குழந்தை பருவ சிலை உள்ளது. இந்த சிலை புன்முருவல் சிரிப்புடன் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி தினத்தில் சூரிய ஒளி நேரடியாக ராமர் சிலையின் நெற்றியில் விழும்படி கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநவமி தினமான இன்று மதியம் சரியாக 12 மணிக்கு கருவறையில் உள்ள பாலராமர் சிலையின் நெற்றியின் மீது சூரியஒளி விழுந்தது.
இந்த நிகழ்ச்சி ‛சூர்ய திலக்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. ராமநவமி தினத்தில் கோவிலில் உள்ள பாலராமரின் நெற்றியில் சரியாக மதியம் 12 மணிக்கு சூரிய ஒளி விழ வேண்டும் என்பதற்காகவே கோவிலில் பிரத்யேகமாக ஏற்பாடு என்பது செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு என்பது ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி தினத்தில் மட்டுமே நடக்கும்.
அதன்படி இன்று அந்த நிகழ்வு நடந்தது. குறைந்தபட்சம் 3 நிமிடம் முதல் அதிகபட்சம் 3.50 நிமிடங்கள் வரை ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி என்பது படும். ராமர் சூரிய குலத்தை சேர்ந்தவர். அவர் இச்வாகு வம்சத்தில் பிறந்தவர். இதனால் ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழ வைக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications