கும்பாபிஷேக விழா! தனி விமானத்தில் வரும் விவிஐபிக்கள்.. கையை பிசையும் அயோத்தி ஏர்போர்ட்.. என்ன காரணம்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க தனி விமானங்களில் முக்கிய பிரமுகர்கள் பலரும் வர உள்ளனர். 100 க்கும் மேற்பட்ட தனி விமானங்கள் வருகை தருவதால் பார்க்கிங் செய்ய முடியாத நிலை உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அங்கு ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கியது. கடந்த 2020 ஆம் ஆண்டு ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கியது. மூன்று ஆண்டுகளாக முழு வீச்சில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்றது. மொத்தம் 3 அடுக்குகளாக ராமர் கோவில் கட்டப்படுகிறது.

நாகரா கட்டடக்கலை நுட்பத்துடன் சிற்பங்கள் கொண்ட தூண்கள் அமைத்து கோவில் கட்டப்பட்டு வருகிறது. கோவிலில் முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவைடைந்துள்ளன. இதையடுத்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர்.
கோவில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகளும் தொடங்கி உள்ளன. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்து மத தலைவர்கள், துறவிகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். பிரபலங்கள், நடிகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்து கொண்ட பிற நபர்கள் என சுமார் 10 பேருக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாளை முதல் அயோத்திக்கு முக்கிய பிரமுகர்கள் வரத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான முக்கிய பிரமுகர்கள் தனி விமானத்தில் அயோத்திக்கு வருகை தர உள்ளதால் அயோத்தி விமான நிலையத்தில் பார்க் செய்ய போதிய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 4 மாநிலங்களில் உள்ள 12 விமான நிலையங்களில் விமானங்களை பார்க்கிங் செய்ய ராமர் கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, அயோத்தியில் இருந்து 1000 கி.மீட்டர் சுற்றளவில் உள்ள நகரங்களில் இருக்கும் விமான நிலையத்தில் பார்க்கிங் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, அயோத்தியில் விஐபிக்களை இறக்கிவிட்டுட்டு பக்கத்து மாநிலங்களுக்கு விமானங்கள் பார்க்கிங் செய்ய கிளம்பி விடும். பிறகு கிளம்பும் போது அங்கிருந்து அயோத்திக்கு வந்து விஐபிக்களை ஏற்றி செல்லும்.












Click it and Unblock the Notifications