பாஜக ஆட்சியிலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்: எம்.பி. சாக்ஷி மகராஜ்
டெல்லி: பாஜக ஆட்சிக் காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என உன்னாவ் எம்.பி. சாக்ஷி மகராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாஜகவின் நோக்கங்களை சந்தேகிக்கக் கூடாது. எங்கள் ஆட்சி காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். இன்றைக்கு இல்லாவிட்டால் நாளை கோவிலை கட்டுவோம். நாளை இல்லாவிடில் நாளை மறுநாள் கட்டுவோம். ஆனால் நிச்சயம் கோவில் கட்டப்படும். பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து ஓராண்டு தான் ஆகியுள்ளது. இன்னும் 4 ஆண்டுகள் பாக்கி உள்ளது என்றார்.
முன்னதாக கடந்த மாதம் அவர் ராமர் கோவில் பற்றி தெரிவித்ததாவது,
அயோத்தியில் ராமர் கோவில் இருந்தது. எதிர்காலத்தில் அந்த கோவில் இருக்கும். ராமர் கோவிலுக்கு சிறப்பான தோற்றம் அளிக்கும் பணி 2019ல் நிறைவடையும். அதுவும் லோக்சபா தேர்தலுக்கு முன்பு நிறைவடையும். இது பாஜகவுக்கு பெரிய விஷயம் அல்ல. ஆனால் என்னைப் போன்ற யோகிகளுக்கு இது பெரிய விஷயம். ராமர் கோவில் இயக்கத்தின்போது அரசியல் கட்சசிகளிடம் ஆதரவு கேட்டோம். பாஜக மட்டுமே ஆதரவு அளித்தது.
பாபர் பெயரைச் சொல்லி அயோத்தியில் யாரும் ஒரு கல்லைக் கூட வைக்க விட மாட்டோம் என்றார்.