ரூ. 2,000 நோட்டை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.. பாபா ராம்தேவ் திடீர் பல்டி!
இரண்டாயிரம் ரூபாய் நோட்டை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.
போபால்: புதிய ரூ.2000 நோட்டு கொண்டு வந்துள்ள முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்து கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். மோடியின் இந்த நடவடிக்கை துணிச்சலானது என யோகா குரு பாபா ராம் தேவ் அப்போது பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம்தேவ், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை நான் ஆதரித்தேன். சில நல்ல திட்டங்களை ஆதரிக்கும்படி காங்கிரஸ் கட்சி என்னிடம் கேட்டிருந்தால் கூட அவர்களுக்கும் நான் ஆதரவு தெரிவித்திருப்பேன்.
ரூ.2000 நோட்டு கொண்டு வந்தது நல்ல விஷயமல்ல. இதனால், தீவிரவாதமும், கருப்புப் பணமும் அதிகரிப்பதோடு, தேர்தல் நேரங்களில் வாக்காளர்களை விலைக்கு வாங்க உதவும். ரூபாய் நோட்டை பிரதமர் எதற்காக வாபஸ் பெற்றார் என தெரியவில்லை. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவது எந்த நாட்டின் பொருளாதாரத்திற்கும் நல்லதல்ல.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் சூட்கேஸ் போன்ற மிகச் சிறிய இடத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளை பதுக்க உதவுகிறது. எனவே, இரண்டாயிரம் ரூபாயை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.