நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்!
நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார்.
டெல்லி: நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார். அவருக்கு நாட்டின் தலைமை நீதிபதி ஜெஎஸ் கெஹர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார்.
புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
20ஆம் தேதி
எதிர்க்கட்சி வேட்பாளராக முன்னாள் லோக்சபா சபாநாயகர் மீரா குமார் களம் இறக்கப்பட்டார். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.
வெற்றி பெற்ற ராம்நாத்கோவிந்த்
அதில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாரை விட 65 சதவீத வாக்குகள் அதிகம் பெற்று ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.
நாடாளுமன்றத்துக்கு வருகை
இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பிரணாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்தை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தார். இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நண்பகல் 12.15 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.
பதவி பிரமாணம்
அப்போது நாட்டின் தலைமை நீதிபதி கெஹர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் இருக்கையில் ராம்நாத் கோவிந்து அமர்ந்தார்.
ராம்நாத்கோவிந்துக்கு வாழ்த்து
அவருக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத்அன்சாரி மற்றும் அனைத்து மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் பங்கேற்றனர்.