கன்னியாஸ்திரியை பலமுறை பலாத்காரம் செய்த கேரள பிஷப் பிராங்கோ திடீர் ராஜினாமா!
கன்னியாஸ்திரியை பலமுறை பலாத்காரம் செய்த கேரள பிஷப் பிராங்கோ ராஜினாமா செய்துள்ளார்.
திருவனந்தபுரம்: பாலியல் புகாருக்கு ஆளான பிஷப் பிராங்கோ மீது விசாரணை நடந்து வரும் நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பிராங்கோ பலமுறை தன்னை பலாத்காரம் செய்திருப்பதாக கன்னியாஸ்திரி குற்றம் சாட்டியுள்ளார்.
வாடிகனுக்கு கடிதம்
இதுதொடர்பான விசாரணை திருப்தியளிக்கவில்லை எனக்கூறிய கன்னியாஸ்திரி வாடிகன் திருச்சபைக்கு தனது புகார் தொடர்பாக கடிதம் எழுதினார். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிராங்கோ முலக்கல்
இதனிடையே பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மேலும் பிராங்கோ முலக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி சக கன்னியாஸ்திரிகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஹைகோர்ட்டில் வழக்கு
இதைத்தொடர்ந்து பேராயர் பிராங்கோ முலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில், 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டு உள்ளது. பேராயருக்கு எதிரான புகாரை போலீசார் சரிவர விசாரிக்கவில்லை எனக்கோரி கேரள ஹைகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திடீர் ராஜினாமா
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதனால், பிராங்கோ முலக்கல் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். பிஷப் பிராங்கோ முலக்கல் மீதான புகார் வாடிகன் வரை சென்றுள்ள நிலையில் அவர் இன்று திடீரென பதவி விலகியுள்ளார்.