இயக்குனர் மகேஷ் பட்டை கொல்ல கூலிப்படைக்கு ரூ.11 லட்சம் கொடுத்த தாதா ரவி பூஜாரி
மும்பை: மும்பை நிழல் உலக தாதா ரவி பூஜாரியின் ஆட்கள் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டை 6 நாட்களில் நான்கு தடவை கொலை செய்ய முயன்று தோல்வி அடைந்துள்ளனர்.
மும்பை நிழல் உலக தாதா ரவி பூஜாரி நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட்காரர்களுக்கு மிரட்டல் விடுத்தார். இந்நிலையில் அவர் தற்போது பாலிவுட் இயக்குனர்கள் மகேஷ் பட் மற்றும் ஃபரா கானுக்கு குறி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
மும்பையில் உள்ள மகேஷ் பட்டின் அலுவலகத்திற்கு வெளியே 13 பேர் கொண்ட கும்பலை போலீசார் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தான் ரவி பூஜாரி மகேஷ் பட்டை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் அவர்களை ஃபரா கானின் வீடு மற்றும் ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் அலுவலகத்தையும் கண்காணிக்க ரவி உத்தரவிட்டுள்ளார். ரவியின் ஆட்கள் கடந்த 2 மாதங்களாக மகேஷ் பட்டை கண்காணித்து வந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் கடந்த 10ம் தேதி துவங்கி 6 நாட்களில் 4 முறை மகேஷை கொலை செய்ய முயன்று தோல்வி அடைந்துள்ளனர்.
மகேஷ் பட்டை கொலை செய்ய முடியாவிட்டால் அவரது அண்ணன் முகேஷ் பட் அல்லது மகன் ராகுல் பட்டை கொல்லுமாறு ரவி தெரிவித்துள்ளார். மகேஷ் பட்டை கொன்று பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி விரைவில் பப்ளிசிட்டி பெற்று அவர்களை மிரட்டுவது தான் ரவியின் திட்டம்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலீசார் 4 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். மகேஷை கொலை செய்ய ஹவாலா மூலம் அந்த கும்பலுக்கு ரூ.11 லட்சத்தை ரவி அளித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.